-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 செப்., 2010

ஒரு இலட்சம் பேரோடு பெருநாள் கொண்டாடிய புரூனை சுல்தான்.






ஆசியாவில் மலேசியாவுக்கும் - இந்தோனேசியாவுக்கும் அருகில் இருக்கும் குட்டி நாடு புரூனை. இலங்கையை விட பத்து மடங்கு சிறிய நாடு. நான்கு இலட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் சுல்தான் ஹஸன் அல்புல்கிய்யா ஆட்சியாளராக இருக்கின்றார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களை விட மன்னரான சுல்தான் ஹஸன் புல்கிய்யா மக்களோடு அதிகமான தொடர்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாக மக்கள் அவரை மிகவும் விரும்புகின்றனர். அறபு நாட்டு மன்னர்களை விட புரூனை சுல்தான் வித்தியாசமானவர். மக்கள் தன்னோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்களை தாராளமாகவே ஏற்படுத்தி வைத்திருக்கின்றார். ஜூம்ஆ, பெருநாள் தொழுகை, கலாசார நிகழ்வுகள் என்பவற்றில் இவர் மக்களோடு ஒருவராக கலந்து கொள்வார். நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் சுல்தானின் கரம் பிடித்து கைலாகு கொடுத்து முத்தமிடுவதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.

கூட்டத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சலிக்காமல் அனைவருக்கும் கைலாகு கொடுத்துவிட்டே அவர் செல்வார். இம்முறை பெருநாள் தினத்தில் ஜூம்ஆத் தொழுகைக்காக அவர் ஜாமிஉல் அஸ்ரி பள்ளிவாசலுக்கு வந்த போது நானும் முகமன் கூறினேன். கடந்த ஒரு வருடத்தில் சுல்தானுக்கு கைலாகு செய்து முகமன் கூறிய நான்காவது சந்தர்ப்பம் அது.

சுல்தான் ஹஸன் அல்புல்கிய்யா முஇஸ்ஸூத் தீன் வத் தவ்லா புரூனையின் 29வது மன்னர். மன்னருக்கு மூன்று மனைவியர். இருவரை தலாக் கூறி விட்டார். பட்டத்து ராணியாக இருப்பவர் ஹாஜியானி சாலிஹா. மொத்தமாக 12 பிள்ளைகள். கடைசி மகள் இளவரசி அமீராவுக்கு இப்போது இரண்டு வயசு.




மன்னரின் மாளிகை 'இஸ்தானா நூருல் ஈமான்' என அழைக்கப்படுகின்றது. ஈத் தினத்தை தொடர்ந்து வரும் மூன்று நாட்களையும் மன்னர் மக்களை சந்திப்பதற்காக ஒதுக்கியிருக்கிறார். இம்மூன்று தினங்களிலும் இஸ்தனாவுக்குச் சென்று மன்னரைச் சந்தித்து முகமன் கூறுவதை மக்கள் வழமையாக்கிக் கொண்டுள்ளனர். வெறுமனே கைக் கொடுத்து விட்டு வருவது மட்டுமல்ல, செல்கின்ற அனைவருக்கும் வயிறார உணவும், இனிப்புக்களும் வழங்கப்படும். சுல்தானைச் சந்தித்து விட்டு வரும் அனைவருக்கும் சுல்தானின் ஈத் வாழ்த்து அட்டையும், பெருநாள் பரிசும் கொடுக்கப்படும். சிறுவர்களாக இருந்தால் ஐந்து டாலர் புரூனை காசும் உண்டு. சுல்தானுக்கு கைலாகு கொடுக்கின்ற போது அவரது சகோதரர்கள், மகன்மார் அனைவரும் கூடவே இருப்பார்கள். மறு பக்கத்தில் பெண்கள் பட்டத்து ராணிக்கும், இளவரசிகளுக்கும் சலாம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.







கடந்த மூன்று நாட்களாக சுல்தானைச் சந்தித்தவர்களின் மொத்தத் தொகை 99487 பேர் (கிட்டத்தட்ட 1லட்சம் பேர்) என புரூனைச் செய்திச் சேவை அறிவித்திருந்தது. இத்தொகையில் 52,000 ஆவது நபராய் நானிருந்தது சந்தோசமாய் இருக்கின்றது.இஸ்தனாவுக்கு நானும் - இலங்கை நண்பன் சிஹானும் சிஹானின் நண்பன் புரூனை ஹஸ்மியம் போயிருந்தோம்.






ஒரு நாட்டில் ஆட்சியாளனுக்கும்- மக்களுக்கும் இடையிலான நல்லுறவுக்கு இதை விடச் சான்றொன்று இருக்க முடியாது. இப்டியான ஆட்சியாளர் ஒருவரை நீங்கள் விரும்புவீர்களா?? வெறுப்பீர்களா?? சத்தியமாக புரூனை மக்கள் தமது மன்னரை மனசாற நேசிக்கிறார்கள்.

25 ஏப்., 2010

நீரோடு பிரியமான சமூகம்

தென் கிழக்காசியாவில் : தென் சீனக்கடலில் அமைந்திருக்கிரும் இலட்சக் கணக்கான தீவுக் கூட்டங்களில் புருனையும் ஒன்று. இலங்கையை விட பத்து மடங்கு சிறிய இந்நாட்டில் அரை மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்து 1984ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இக்குட்டி நாடு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் கூடிய தலா வருமானம் பெறும் நாடாக மாறியுள்ளது. எதிர்பாராதவிதமாக கிடைக்கப்பெற்ற எண்ணெய் வளத்தில் புதிய பணக்காரர்களாக மாறியவர்கள் இந்நாட்டு மக்கள். நாட்டில் மன்னர் ஆட்சி நிலவிய போதிலும் மக்கள் குறையில்லாமல் நடத்தப்படுகின்றனர். 'அமைதியின் இல்லம்' என்று பொருள்படும் வகையில் 'புருனை – தாருஸ் ஸலாம்' என்ற அடைமொழியோடே இந்நாடு அழைக்கப்படுகின்றது.





எண்ணெய், எரிவாயு வருமானம் கிடைக்கப் பெற முன்னர் இந்நாட்டு மக்கள் மீன் பிடிக்கும் சமூகமாகவே இருந்துள்ளனர். சுற்றி வர கடல்: நதிகள், ஏரிகள் என்று இயற்கை இவர்களை நீரோடு பிணைத்துவிட்டது. ஆரம்ப காலத்தில் இவர்கள் தமது இருப்பிடங்களைக் கூட நீரின் மேலேயே அமைத்து வாழ்ந்து வந்தனர். பணக்காரர்களாக மாறிவிட்ட பின்பும் நீரின் மேலிருக்கும் பிரியம் இவர்களை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.
தலைநகர் பந்தார் சிறீ பகவானை ஒட்டி இருக்கும் கம்பூங் தமோய் (நீரின் மேலிருக்கும் கிராமம்) இவர்களின் பழைய வாழ்க்கையை தொடர்ந்தும் நினைவூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கின்ற போது செல்வ வளம் கொழிக்கும் இந்நாட்டில் ஏன் இந்த பலகை வீடுகள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ஆனால் இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இதை விட்டுவிட எமக்கு விருப்பமில்லை என்பதுதான் நீரின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பலகை வீடுகளில் வசிப்போர் சொல்லும் பதில். பலகை வீடுகள் என்றாலும் ஏ.சீ. செட்டலைட் டீ.வி என்று எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏரியின் இரு கரைகளிலும் இப்படி அமைக்கப்பட்ட வீடுகள் ஒன்று இரண்டல்ல. ஓராயிரத்துக்கு மேல் இருக்கின்றன. இக்கிராமத்திற்கான பாடசாலையும் தண்ணீரின் மேல்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுவதிலிருந்து இவர்களுக்கு தண்ணீர் மேலுள்ள பற்று எவ்வளவு என்பது புரியும்.




இன்று ஞாயிற்றுக் கிழமை. இந்த தண்ணீர் கிராமத்தை தாண்டி புரூனையின் இன்னொரு மாகாணமான தம்புரோங் பகுதிக்கு செல்லும் வாய்ப்புக்கிடைத்தது. தம்புரோங் ஒரு கிராமப்புற மாகாணம். நில வழியாகச் செல்ல வேண்டுமாயின் மலேசியாவின் சரவாக் மாகாணத்தைக் கடந்துதான் இங்கு செல்ல வேண்டும். நீர் வழி பயணத்தின் போதும் மலேசியாவின் ஒரு சிறு பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.



பந்தாரிலிருந்து காலை எட்டரை மணிக்கு எம் படகுப் பயணம் தொடங்கியது. முக்கால் மணி நேரப் பயணம். லம்பூங் ஆற்றைக் கிழித்துக் கொண்டு படகு பறந்தது. ஆற்றின் இரு மருங்கும் அடர்ந்த காடு. பெயர் தெரியாத அடர்ந்த புதர்கள். முதலைகள் அதிகமாக வாழும் ஏரியா என்று படகோட்டி கொச்சை ஆங்கிலத்தில் சொல்ல முதலை தேடத் தொடங்கினோம். போகும் போதும் சரி திரும்பும் போதும் சரி கண்ணுக்கு ஒரு முதலையும் தென்படவில்லை. கூட வந்த இரண்டு ஆபிரிக்க மாணவர்கள் முதலைகளால் எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் படகு கவிழ்ந்து விடக் கூடாதென்பதற்காகவும் அடிக்கடி 'ஆயத்துல் குர்ஸியை' ஓதிக் கொண்டனர்.
முதலைகள் இருப்பதாகச் சொன்ன அந்தப் பகுதியில் எந்த வித பயமும் இல்லாமல் ஒரு இளம் ஜோடி இறால் பிடித்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும் போது எம் நாட்டு சிங்களப் பாடல்களில் வரும் காட்சி போலிருந்தது.



தம்புரோங்கில் விசேசமாக பார்ப்பதற்கு பெரிதாய் எதுவும் இல்லை என்றாலும் அந்த மக்களின் வாழ்க்கை நீரோடு ஒட்டியதாக அமைந்திருந்தது. வீட்டின் முன்னால் காரோடு சேர்த்து படகையும் நிறுத்தி வைத்திருந்தனர். வசதி இருந்தவர்கள் ஆற்றோரமாய் அழகாய் பலகைகளால் சிறிய ரெஸ்ட்டுரன்ட் போன்று அறைகளை அமைத்து வைத்திருந்தனர். அவ்வறைகளில் மீன் பிடிப்பதற்கான கருவிகள்;, மீனை சுட்டு உண்பதற்கான ஏற்பாடுகள் என்பவற்றையும் செய்து வைத்திருந்தனர். சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.


இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கு ஏற்ற நிலப்பகுதிகள் காணப்பட்ட போதிலும் இவர்கள் அதன்பால் ஆர்வம் அற்றவர்களாகவே உள்ளனர். இவர்கள் மண்வெட்டி தூக்குவதை விட தூண்டிலோடு திரியவே ஆசைப்படுகின்றனர். ஏனென்றால் இவர்கள் நீரோடு பிரியமான மக்கள்.

16 ஏப்., 2010

ஒரு மழைக் காலத்தின் ஆரம்பம் -பகுதி:2




கல்லூரி நுழைவுக்கான நேர்முகத் தேர்வுக்கு போய் வந்து இரண்டு நாட்களாகி விட்டன. அது பற்றிய நினைவுடன் தம்பியோடு வீட்டுத் தோட்டத்தில் மட்டையும் பந்துமாக விளையாடிக் கொண்டிருந்தேன்.;. ஊருக்கு வெளியிலுள்ள மைதானத்தில் விளையாடப் போவதற்கு சின்ன வயதிலிருந்தே அனுமதி மறுக்கப்பட்டு வந்ததால் வீட்டுத் தோட்டத்தையே ஒரு கெத்தாராமையாக நினைத்து விளையாடி வந்தோம். நான், தம்பி, அஸ்மத், யாசிர், பவாஸ் ஐந்து பேரும் ஐந்து நாடுகளாக உலகக் கோப்பை போட்டிகளைக் கூட இந்த தோட்டத்தில் விளையாடி இருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டுத் தோட்டத்தில் நாம் விளையாடும் இந்த விளையாட்டுக்கு நிறையவே எதிர்ப்பிருந்தது. பந்து கூரையில் அடிக்கடி சிக்கிக் கொள்வதால் நாம் ஏறி எடுக்க வேண்டியிருந்தது. இது வாப்பாவுக்கு பிடிக்கவில்லை. கூரையில் ஏறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உம்மாவின் எச்சரிக்கை 'டேய் விழுந்து கால கீல உடைச்சிக் கொள்ள போறீங்க...இருங்க வாப்பா வரட்டும்..' இதற்கெல்லாம் பயந்தா எப்படி விளையாடுவது.

அதே போன்றே எமது விளையாட்டில் உம்மும்மாவுக்கும் விருப்பம் இருக்கவில்லை. உம்மும்மா மரங்கள் வளர்ப்பதில் அதீத ஈடுபாடுள்ளவர். எமது விளையாட்டில் அதிகம் பாதிப்படைவது அவர் நட்டிய மரங்கள்தான். மாலையில் மரங்களுக்கு நீரூற்றும் போதுதான் எமது அட்டகாசங்களை கண்டு கொள்வார். இரக்கமான மனுசி. திட்டமாட்டா. வாய்க்குள் முணு முணுப்பதோடும் மறுநாள் விளையாடும் போது 'டேய் மரங்கள உடைச்சிராம விளையாடுங்க' என்ற வேண்டுதலோடும் தன் எதிர்ப்பை முடித்துக் கொள்ளுவா.


எம் விளையாட்டை விரும்பி ரசிக்கும் ஒரே ஆள் அப்பா மட்டும்தான் - பாக்கிஸ்தான் சப்போர்டர். இலங்கைத் தோற்றுப் போனால் அந்த பக்கம் தலைகாட்ட முடியாது. 'எங்கடாப்பா போயிட்டு வார..பருப்பு மூட்டை எடுக்கவா?' – 'பாருங்களே! அடுத்த மெச்சில எப்படி பருப்பு தாரம் என்று' நின்று பேசாமல் பதிலை மட்டும் சொல்லி விட்டு ஓடி வந்து விடுவோம்.

இந்த தோட்டம்..விளையாட்டு இதையெல்லாம் விட்டு விட்டு புதிய ஒரு அத்தியாயத்தை தொடங்கச் சொல்லும் ஒரு செய்தியோடு சகோ:நிஸாம் வீட்டுக்கு வந்தார். கல்லூரி தேர்வில் நான் சித்தியடைந்திருப்பதாக வந்து சொன்னார். அவர் போய் சிறிது நேரத்தில் சகோ:ராபியும் அதே செய்தியோடு வீட்டுக்கு வந்தார். நான் புதிதாய் பிறப்பெடுத்தேன்.

கல்லூரிக்குச் செல்வதில் எல்லோருக்கும் சந்தோசம். ஆனால் ஊர் தலைவர் வாப்பாவிடம் 'அங்கு அனுப்ப வேண்டாம், அங்கு போனால் விரல் ஆட்டும் கொள்கையோடுதான் மகன் வந்து சேருவான்' என்று சொல்லியதாக வாப்பா வந்து வீட்டில் சொன்ன போது உம்மா சொன்னார் : 'ஏன்ட மகன் எங்க போனாலும் அப்படி ஆக மாட்டான்..அவர்களுக்கு பொறாமை..அதுதான்' எல்லா தாய்மாருக்கும் பிள்ளை மீதுள்ள நம்பிக்கை என் உம்மாவுக்கும் இருந்தது.

என் மீது பள்ளி நிர்வாகத்திற்கு மட்டுமல்ல என் வீட்டாருக்கும் இந்த விரல் ஆட்டும் விசயத்தில் நீண்ட நாட்களாகவே ஒரு கண் இருந்து வந்தது. தொழுகையில் தப்பித் தவறியாவது விரல் அசைந்து விடாமல் இருக்க நான் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. கல்லூரி முதல் லீவில் ஊருக்கு வந்த போது எல்லோரும் என் செயல்களை அவதானிப்பதை நான் உணர்ந்தேன். தொழுது விட்டு வீட்டுக்கு வந்த போது என் கடைசித் தம்பி வாப்பாவிடம் ரகசியமாய்ச் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. 'வாப்பா பள்ளித் தலைவர் சொன்னது போல நானா ஆட்ற குரூப் இல்ல..நான் தொழும் போது பார்த்தேன்..அவன் ஆட்டல்ல'.

நான் கல்லூரியிலிருந்து வெளியேறும் வரை அதே தலைவர்தான் நிர்வாகியாக இருந்தார். நான் வெளியாகி சில மாதங்களில் தெரிவான புதிய நிர்வாகத்தினருக்கு என் மீது அத்தகைய தேவையில்லாத பயங்கள் இருக்கவில்லை. பள்ளிவாசலுக்கான சட்டக் கோவையை எழுதும் பொறுப்பை என்னிடம் தரும் அளவுக்கு அவர்களிடம் என் மீது நம்பிக்கை இருந்தது.




2000 மே 17 :

அது ஒரு அழகான பௌர்ணமி தினம். வெசக் தினம் என்பதால் வாகன நெரிசல். அலையாய் வீதிகள் தோறும் சனக் கூட்டம். தோரணங்கள், மின் விளக்கு அலங்காரம் - தலைநகரின் அழகை ஒரு கிராமத்துப் பையனாக ரசித்துக் கொண்டு பயணித்தேன்.

பேருவலைச் சென்றடையும் போது இரவு பத்து மணியிருக்கும்..பஸாரில் பஸ்மினா ஹோட்டல் மட்டும் திறந்திருந்தது. சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம்.நாளை புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நாள்.

எனக்கு முன்பே சில மாணவர்கள் தமது பெற்றோர் சகிதம் வந்திருந்தனர். அந்த இரவில் அறிமுகமாகிக் கொள்ள சந்தர்ப்பம் இருக்கவில்லை. பிரயாணக் களைப்பில் அவர்கள் உறங்கிப் போயிருந்தனர்.

ஒருவன் மட்டும் வந்து கதைத்தான். பெயரையும் ஊரையும் கேட்டான். ஓ! நீங்க கெக்கிறாவையா?? –நான் தம்புள்ளை, பேரு தஸ்லீம். அவன் நீங்க என்று மரியாதையாக அழைத்த முதலும் கடைசியுமான தருணம் அது மட்டும்தான். பக்கத்து ஏரியா, கூடவே என் மாமா ஒருவர் அவர்களின் ஊரில் திருமணம் முடித்திருந்தார். விசாரித்துப் பார்த்ததில் தூரத்து சொந்தம். அறிமுகத்தோடு நட்பும் துளிர்விட்டது.

சுபஹூக்கே எழுந்து குளித்து நான் ரெடியாகி இருந்தேன். 'எப்படியும் பெயர்களைப் பதிவதற்கு எட்டு ஒன்பது மணியாவது ஆகும்..யாராவது வாங்க..நான் டைனிங் ஹோலில் டீ எடுத்துத் தாரேன்.' என்று ஹொஸ்டல் வோர்டன் சொல்ல அப்போது ஹொஸ்டலில் இருந்த நானும் இன்னொருவனும் அவரோடு கிளம்பினோம். என்னோடு கூட வந்தவன் வோர்டனோடு சகஜமாகப் பேசிக் கொண்டு வந்தான். அவன் சீனியராக இருக்க வேண்டும். நான் நினைத்துக் கொண்டேன். திரும்பும் போது அவனிடம் கேட்டேன் : 'நானா நீங்க எத்தனையாம் ஆண்டு??' – நானும் புதிய பெட்ஜ்தான் - பேரு சாலிஹீன் - ஊரு புல்மூட்டை – நாங்க மூணு நாளைக்கு முன்னுக்கே வந்துட்டம்.

பதிவுகள் முடிந்து கூட்டி வந்தவர்கள் விட்டுச் செல்லும் தருணம். நிறைய பேருக்கு கண்கள் கலங்கி இருந்தன. நான் வாப்பாவை வழியனுப்பிவிட்டு சோகத்தோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்..அப்போது திடீர் என்று ஒருத்தன் முன்னால் வந்து 'நான் நப்லான்வா, நான் மாத்தரவா...இது ஏன்ட உம்மாவா..இது..'' அந்த பாஸை புதிதாக இருந்தது. மட்டுமல்ல அந்த அறிமுகம் மறக்காமலும் இருக்கிறது.

ஒரே நாளைக்குள் அதிகமானவர்களோடு அறிமுகம் ஆகிக் கொண்டேன். வீட்டில் எட்டரை மணிக்கு உண்டு ஒன்பது மணிக்குள் உறங்கிப்போகும் நான் முதன் முதலாய் அன்று பதினொன்னரை மணி தாண்டியும் தூக்கத்தை மறந்து புதிய நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.

(மழை தொடர்ந்து பொழியும் - இன்சா அல்லாஹ்)

14 ஏப்., 2010

ஒரு மழைக் காலத்தின் ஆரம்பம் - 1

வாழ்க்கையில் முதல் தடவையாக ரயில் பிரயாணம். இரவு பத்தரை மணிக்கு வந்து சேர்ந்த மட்டக்களப்பு-கொழும்பு ரயிலில் ஏறி கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலம் பயணித்து கோட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது உலகத்தைக் கண்டுவிட்டதான மகிழ்ச்சி.

தலைநகரத்தைக் காணும் முதல் அனுபவம் அது. பதினாறு வயது என்றாலும் வாப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டே பாதையைக் கடந்து ரயில் நிலையத்துக்கு முன்பிருக்கும் 'பிட கோட்டே கோப்பி கடே'யில் டீ குடித்து அலுத்கமை பஸ்ஸில் ஏறினோம் நானும் வாப்பாவும். (அப்போது பாம் லீப் ஹோட்டல் அங்கிருக்கிறது என்ற விபரம் எல்லாம் எனக்குத் தெரியாது).

ஓ.லேவல் பரீட்சை முடிவுகள் வெளியாகி அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த நேரம் - மாத்தளை சாஹிராவில் கொமர்ஸ் படிக்க முடிவெடுத்து கடைசி நேரத்தில் ராஜூ நாநா என்பவர் சொன்ன ஐடியாவில் புறப்பட்ட பயணம்தான் இது.


காலை ஏழு மணியளவில் பேருவலை பஸ் தரிப்பிடத்தில் போய் இறங்கினோம்.

பேருவலை – நிறைய தடவைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.மாணிக்கக் கல் வியாபாரத்துக்கு பெயர் போன ஊர் அது. எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் குடியிருந்த ஒரு அப்பாவின் மூலம் கெச்சிமலை தர்காவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் தவறாமல் வருஸா வருஸம் கெச்சிமலை தர்காவுக்கு போய் வருபவர்.அது தவிர பாணந்துறை, அலுத்கமை, தர்கா நகர் என்ற ஊர்களின் பெயர்கள் ஓரளவுக்கு பரீட்சயமாய் இருந்தன. பாணந்துறையில் எங்கள் அயல் வீட்டு நோநக்காவும் அலுத்கமையில் அவளது தம்பி ஜனக அய்யாவும் மணம் முடித்திருந்தனர். ரேடீயோவில் அடிக்கடி தர்காநகர் பஸால் முஹம்மத் என்ற பெயரைக் கேட்டிருக்கிறேன். இந்த அறிமுகங்கள் தவிர இந்த ஏரியாவைப் பற்றி வேறெதுவும் தெரியாதவனாக பேருவலையில் கால்பதித்தேன்.. லேசாகத் தூறிய மழையில் வீதி நனைந்திருந்தது.


கல்லூரி நுழைவுக்கான நேர்முகத் தேர்தல். யாரும் அறிமுகமில்லாத சூழல். என்றாலும் போட்டி போட்டுக் கொண்டு கவனிக்க ஆட்கள் இருந்தனர். என் பக்கத்து ஊரைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருந்தனர்.(ராபி நானாவும், பாயிஸ் நாநாவும்). ஆனால் அவர்களை எனக்கு தெரியவில்லை. என்னை அழைத்துச் சென்று நேர்முகப் பரீட்சை எப்படி இருக்கும், என்ன மாதிரியான கேள்விகள் வரும் என்றெல்லாம் சொல்லித் தந்தனர். நான் அங்கிருக்கும் சீனியர் விடுதியின் ஒன்பதாம் இலக்க அறையில் தங்க வைக்கப்பட்டேன். அந்த விடுதியில்தான் சகோ:அஸ்மினை முதன் முதல் சந்தித்தேன்.

எழுத்துப் பரீட்சையை நன்றாய் எழுதி விட்ட திருப்தி என்றாலும் வாய்மொழித் தேர்வை நினைக்கும் போது உதறல் எடுத்தது. என்ன கேட்பார்கள்?? அவர்கள் எப்படி இருப்பார்கள்?? எனக்கு சான்ஸ் கிடைக்குமா? இதயம் இடம் மாறித் துடிக்கும் சொல்ல முடியாத உணர்வு அது. பயப்படாமல் போ!!வாப்பா தைரியம் ஊட்டி அனுப்பினாலும் எனக்குள் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க முடியவில்லை.

இயல்பில் நான் மிகவும் கூச்சமுடையவன். மற்றவர்களோடு பேசுவதற்கு பெரியளவில் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். யாராவது வீட்டுக்கு வந்தால் கூட அறைக்குள் அடைந்து கொள்வேன். பொம்புளப் புள்ள போல இருக்கிறான் என்று வாப்பாவிடம் நிறையவே திட்டு வாங்கியிருக்கிறேன். அவர்கள் கேள்வி கேட்கும் போது அழுதுவிடுவேனோ என்று கூட அஞ்சினேன்.

எனது அச்சத்திற்கும் ஒரு காரணம் இருந்தது. தனி வெள்ளை நிற சூட் போட்டு ஒருத்தர் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தார். அகப்பட்டவர்களோடு அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். எனக்குத்தான் ஆங்கிலம் வரவே வராதே..ஓ.லெவலில் ஏதோ ஒரு எஸ் எடுத்து பாஸாகி இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு எனக்கு ஆங்கில அறிவு அப்போது இருக்கவில்லை. யா அல்லாஹ் அந்த வெள்ளை சூட் மனுசன் இருக்கக் கூடாது. அவர்கள் ஆங்கிலத்தில் எதுவும் கேட்கக் கூடாது. மனசுக்குள் வேண்டிக் கொண்டேன்.

வாய்மொழித் தேர்வுக்கான எனது முறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐந்து பேர் எனக்கு முன்னால் இருந்தார்கள். என் கூட இருந்த ஐவரில் ஒருத்தன் மட்டும் சிரித்துக் கொண்டே இருந்தான். பல் மட்டும் பளிச்சென்று இருந்தது. கருப்பாய் இருந்தாலும் எடுப்பாய் இருந்தான். என் பெயரைக் கேட்டான். சொன்னேன். உங்கட பேரு?? நான் வினவினேன். நவ்பல் - ஊரு சம்மாந்துறை. அவன் சிரிப்பதை விடுவதாய் இல்லை. பின்புதான் தெரிந்தது பயத்தை அடக்கவே அவன் சிரிக்கிறான் என்பது. அவன் கூட இருந்த நால்வரில் இருவர் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். தாம் ஹாபிஸூக்கு ஓதியிருக்கிறோம் என்றார்கள். ஓ.லேவல் ரிஸல்ட்டைக் கேட்டேன். என்னை விட அவர்களுக்கே வாய்ப்பிருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

டிங் என்ற மணியோசை – எனது பெயரைச் சொல்லி அழைப்பது கேட்கிறது. சலாம் சொல்லி உள்நுழைந்தேன். நல்ல வேலை அந்த வெள்ளை சூட் மனிதர் இல்லை. (அவர் ஹொஸ்டல் வோர்டன் என்பது பிறகுதான் தெரிந்தது). என்ன கேட்டார்கள். நான் என்ன பதில் சொன்னேன் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாய் இப்போது ஞாபகத்தில் இல்லை.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் மறக்கப்படாமல் மனசுக்குள் அப்படியே ஒட்டிப் போய் இருக்கிறது. 'ஏன் இந்த கல்லூரியில படிக்கனும்னு ஆசைப்பட்றீங்க?, இங்க படிக்க வார நோக்கம் என்ன? - இதைக் கேட்பார்கள் என்று ஏற்கனவே சிலர் சொல்லி அனுப்பினார்கள். அதற்கான பதிலையும் அவர்கள் சொல்லித் தந்திருந்தனர். 'உலகக் கல்வி..மார்க்கக் கல்வி'. சீ அவர்கள் சொல்லித் தந்ததை அப்படியே சொல்வதற்கு என்னால் முடியவில்லை. 'நான் ஒரு நல்ல மனுசனா எங்கட உம்மா,வாப்பா,ஊர் பெருமைப்பட்ற அளவுக்கு பெரிய மனுசனா வரனும். இந்த சமூகத்திற்கு என்று நான் ஏதாவது செய்யனும். அதுக்காகத்தான் இங்க படிக்க ஆசைப்பட்றேன்'. நான் இப்படித்தான் பதிலளித்தேன்.

இன்டர்வ்யூ முடிந்து விட்டது. பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். நான் தெரிவாகியிருக்க வேண்டும் என்று ஆயிரம் தடவைகளுக்கு மேல் இறைவனை வேண்டிக் கொண்டேன். இன்டரவ்யூ முடிந்து அங்கிருந்து கிளம்பும் போது மாலை நான்கு மணியைத் தாண்டிவிட்டது. வானம் இருட்டியிருந்தது. ஆட்டோ பிடித்து பேருவலை பஸ் தரிப்பிடத்தை (பேருவலையில் எங்கே பஸ் தரிப்பிடம் இருக்கிறது? என்று கேட்க வேண்டாம்.) அடையும் போது மழை சோவென்று பொலியத் தொடங்கியது.

2000ம் ஆண்டின் மழைக் காலம் இப்படித்தான் ஆரம்பித்தது.




(மழை தொடர்ந்து பொழியும் - இன்சா அல்லாஹ்)

26 ஜன., 2010

தேர்தல் இரவும் என் மூத்தப்பாவும்...

சிறுகதை - கெகிறாவை இஸ்மத்








என் அப்பா (உம்மாவின் வாப்பா) மௌத்தாகி இன்னும் ஒரு வருஸமாக வில்லை. தேர்தல் இரவில் என் அப்பாவை எனக்கு மறக்க முடியாது. வெட்டினாலும் பச்சை இரத்தம்தான் வரும் என்று சொல்பவர். என் கூட எப்போதும் அப்பாவுக்கு தனிப் பிரியம் இருந்தது. கல்லூரி விடுமுறையில் நான் வீட்டிற்கு வந்து விட்டதைக் கேள்விப்பட்டால் அவராகவே பார்ப்பதற்கு ஓடி வந்து விடுவார். கடைசிக் காலத்தில் நடக்க முடியாமல் போன போது கூட தள்ளாடித் தள்ளாடி வீட்டிற்கு என்னைப் பார்க்கவென்று வந்தது இன்னும் ஞாபகமாய் மனசுக்குள் ஒட்டி நிற்கின்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டிற்குச் சென்றால் எனக்கு முதல் வேலை அப்பாவைப் பார்த்து விட்டு வருவதுதான்..நான் கொழும்பில் இருக்கும் ஒரு வெள்ளிக் கிழமைத் தினத்தில் அப்பாவின் மரணச் செய்தி வந்தது. அப்பாவின் ஜனாசாவை நானே முன்னின்று தொழுவித்தேன்.

இன்று தேர்தல் இரவு. கடந்த காலத் தேர்தல்களில் முடிவுகளுக்காய் எமது வீட்டில் விழித்திருப்பது நானும் அப்பாவும் மட்டும்தான். அடுத்தவர்கள் காத்திருந்து முதல் முடிவு வருவதற்கிடையில் தூங்கிப் போவார்கள்.

அப்பா பரம்பரைப் பச்சை என்று சொன்னேன். தேர்தல் முடிவு எதிர்ப்புறத்திற்கு சார்பாய் அறிவிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அப்பா வெளியில் சென்று காறி உமிழ்ந்து தன் எதிர்ப்பைக் காட்டிக் கொள்வார்.

எங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு மாமாவைத் தவிர எல்லோரும் அப்பாவைப் போன்றே பச்சைக்கு சார்பானவர்கள். ஆனால் சந்திரிக்கா வந்த போது கொஞ்சம் கட்சித் தாவல்கள் என் வீட்டுக்குள்ளும் நடந்தன.

அம்மையார் ஆட்சிக்கு வந்த பின்னர் எமது பாடசாலை திறப்பு விழா நிகழ்வில் இரு கட்சிக்குள்ளும் மோதல் ஏற்பட்டு கலவரத்தில் முடிந்தது. கட்டியவர்கள் நாங்கள் திறப்பது நீங்களோ என்ற வகையில் பச்சை அணியினர் திறப்பு விழாவுக்கு ஆயத்தமாகினர். ஆட்சியில் நாம் இருக்க நீர் எப்படி எம்மைப் புறக்கணிப்பீர் என்று நீலத்தினர் கொதித்தெழுந்தனர். திறப்பு விழா கடைசி நேரத்தில் குழப்பப்பட்டது. பச்சை அணியினர் தொடுத்த வழக்கில் என் தந்தையும் பிரதிவாதியாக்கப்பட்டார். குழப்பம் விளைவித்த அப்போதைய சமூக நிவாரண அமைச்சருக்கு மாலைப் போட்டதே கூறப்பட்ட குற்றச்சாட்டு.

அமைச்சரோடு ஏற்பட்ட தொடர்பு சில வருடங்கள் வரை நீலக் கட்சிக்கு வாக்களிக்க வைத்தது.ஆனால் அப்பா மட்டும் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தேர்தல் இரவுகளில் அவரது காறி உமிழல் தொடர்ந்தது.

அப்பாவுக்கு ஏன் இத்தனைப் பற்று என்பது எனக்குத் தெரியாது. மரவள்ளியும் பட்டிணியும் தேவையென்றால் பச்சையை மறுத்து வாக்களியுங்கள் என்று எமக்கு தேர்தல் நாளில் எச்சரிக்கைச் செய்வார்.

பச்சை மீதுள்ள பாசம் சிலவேளை ஜே.ஆர் காலத்தில் அப்பாவுக்குக் கிடைத்த இரண்டரை ஏக்கர் வயலுக்காய் ஏற்பட்டதாய் இருக்கலாம்...

நீலமும் சிவப்பும் கூட்டணி அமைத்த போது அப்பாவின் கவலை அதீதமானது. 89,90 களில் ஏற்பட்ட கலவர நிலையை ஞாபகப்படுத்துவார். அந்த கலவரக் கால நினைவுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு ஐந்து வயசு. கலவரக்காரர்களுக்குப் பயந்து சாந்த அய்யா எங்கள் வீட்டில் ஒரு நாள் ஒழிந்திருந்தது ஞாபகம் இருக்கிறது. அது தவிர என் வகுப்புத் தோழி ரிஸ்வானாவின் வாப்பா கோயா ஹாஜியாரை கலவரக் காரர்கள் வெள்ளிக் கிழமைத் தினமொன்றில் வாளால் வெட்டிக் கொன்றதும் என் பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர் சந்தியில் கட்டி வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் ஞாபகம் இருக்கிறது.(1990 ஜனவரி 01)
ஒரு நாள் கலவரக்காரர்கள் ஊர் பொலிஸ் நிலையத்தைத் தாக்கினர். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகத்தான் வாப்பாவின் தையல் கடை இருந்தது. வாப்பா திரும்பும் வரை உம்மா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் அழுதது ஞாபகம் இருக்கிறது. தவிர காரணமே இல்லாமல் என் உம்மும்மா வீட்டு ஜன்னலுக்கு கல்லெறிந்து உடைத்ததும் என் மாமாவிடம் பத்தாயிரம் ரூபா கப்பம் கேட்டு மிரட்டியதும் எனக்கு மறக்கவில்லை.

1994ல் கலவரக்காரர்கள் ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்த போது இந்தப் பின்னணிகளோடு அவர்கள் பற்றி என் அப்பா எச்சரித்தது நியாயமாகவே எனக்குப்பட்டது.

நேற்று வீட்டிலிருந்து கோல் வந்தது. தேர்தல் பற்றி விசாரித்தேன்.யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு 'நாம் அரசரை மாற்ற விரும்பவில்லை' என்று பதில் வந்தது. அத்தோடு கூடவே வாப்பா இன்னொரு செய்தியையும் சொன்னார். எனக்கு வந்திருக்கும் வாக்காளர் அட்டை என் அப்பாவின் பெயரை முதல் எழுத்தாய் கொண்டு வந்திருக்கிறதாம்...

'நான் அப்பாவின் பேரன் - அது தான்' என்று சொல்லிச் சிரித்து போனை வைத்தேன்.

16 ஜன., 2010

புரூனையின் ரமழானும் தண்ணீர் கிராமமும்

புருனை நோன்புக்கும் இலங்கை நோன்புக்கும் அதிகம் வித்தியாசம் தெரியவில்லை..எம் நாட்டு குட்டிக் கிராமங்களில் தலை பிறையன்று கேட்கும் வெடில் சத்தம் இங்கும் கேட்டது..
முதல் நோன்பன்று தராவீஹ் தொழுவதற்கு சுல்தான் ஹஸன் பல்கிய்யா பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றேன்..இங்குள்ள பெரிய பள்ளிவாசல் அதுதான்..அதன் அழகை பார்த்துதான் ரசிக்க முடியும் ..வார்த்தையில் சொல்ல முடியாது..தங்க முலாம் பூசப்பட்ட நான்கு பெரிய குப்பாக்கள்..எட்டு மினாரா..பள்ளிவாசல் உள்ளே தங்கத்தால் எழுதப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள்..மின்னும் விளக்கொளியில் அப்பப்பா..ஆனால் இமாம்...நம் நாட்டு காரிகளுக்கு கிட்டத்திலும் வைக்க முடியாது..
சூறா யாஸினுக்கு இங்கு மிகப் பெரிய இடமுண்டு..முதல் தராஹீஹின் 20 ரக்கத்தும் யாஸினில் முடிந்தது..நம்மூரில் போன்று இங்கும்..அஸ்ஸலாத்துல் ஜாமிஆ..அல்லாஹூம்ம ஸல்லி..என்று ஒவ்வொரு இரண்டு ரக்கத்துகளுக்கிடையிலும் முஅத்தின் சத்தாமாய்..ராகத்தோடு ஓதுவார்..

பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆதி இஸ்மத் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்..அவன் அஸல் அஜ்வத் அலியை போன்றிருப்பான்..புருனை மாணவர்களில் வித்தியாசமானவன்.கடந்த வெள்ளிக் கிழமை எம்மை தண்ணீர் மேல் இருக்கும் கிராமத்திற்கு கூட்டிச் சென்றான்..அதன் பெயர் தமோஹ் என்பது..அங்கு சுமார் 500 மேற்பட்ட வீடுகள்..அனைத்தும் தண்ணீரின் மேல் பலகையால் அமைக்கப்பட்ட வீடுகள்..புருனையின் ஆதிக் குடிகள் அவர்கள் என்று ஆதி விளக்கினான்.பலகை வீடுகள் என்றாலும் எல்லா வீடுகளுக்கும் ஏ.ஸீ, டீவி போன்ற வசதிகளை சுல்தான் செய்து கொடுத்துள்ளார்.
பெரியதொரு நதியின் மேலேயே அந்தக் கிராமம் அமைந்துள்ளது..ஸோ..நாங்கள் ஒரு வாடகை போர்ட்டில் அந்த கிராமத்தை சுற்றி வந்தோம்..கானா இத்ரீஸ் தண்ணீருக்குப் பயந்தவன்..எனவே அவன் போர்ட்டில் ஏறவில்லை..ஒரு ஆளுக்கு 50 சென்ட்(40ரூபாய்)
போர்ட்டில் போகும் போது இந்தோNனிசியாவைச் சேர்ந்த ஜமால் சரியான கூத்துப் போட்டான்..தண்ணீரில் கை நனைத்து விளையாடினான்..தண்ணீரை சுவைத்துப் பார்த்தான்.

ஆரம்பத்திலிருந்தே நான் தண்ணீரை தொடவில்லை..ஏனென்றால் எனக்குள் ஒரு சந்தேகம்..எல்லாம் முடிந்து கரையொதுங்கிய போது ஆதியிடம் கேட்டேன்..'' இவர்கள் கழிக்கும் மலம் சலம்..எங்கு விழும்?''
வேறெங்கே??ஆற்றில்தான் என்றான்..ஜமால் ஹொஸ்டலுக்கு வரும் வரை...குமட்டிக் கொண்டே வந்தான்..

புரூனையின் இரவுச் சந்தை

புருனையில் ரமழான் இலங்கையில் போன்றே கழிகின்றது..ஆனால் இங்கு மஸ்ஜித்களில் இப்தார் ஏற்பாடு செய்யும் வழமை இல்லை..கொகோகோலா ரமழானில் மலிவு விலையில் விற்கப் படுகின்றது.இங்கு அதிகமான சீன முஸ்லிம்கள் உள்ளனர்.அவர்கள் முஸ்லிம்கள் என்பதை ரமழானில் மட்டுமே அடையாளம் காணமுடியும்..இங்குள்ள எல்லா கடைகளிலும் சீன பெண்கள்தான் பணிபுரிகின்றனர்...ரமழானுக்கு முன்னர் அவர்கள் அரைகுறை ஆடைகளோடுதான் இருந்தனர்..முதல் ரமழான் அன்று அவர்களை ஹிஜாபுடன் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன்..ஹொஸ்டலுக்கு வந்த புரூனை நண்பன் ஆதியிடம் இது ரமழானுக்கு சுல்தான் போட்ட சட்டமா? என்று கேட்க இல்லை ரமழானில் எல்லோரும் திருந்தி விடுகின்றனர்..ரமழானை கண்ணியப்படுத்த வேண்டாமா? என்றான்..எங்கள் நாட்டில் ரமாழானுக்கு பள்ளிவாசல்கள் நிறைவதை நான் ஞாபகப்படுத்திக் கொண்டேன்..

இங்கும் தராவீஹ் தொழுவதற்கு பெண்கள் பள்ளிக்கு வருகின்றனர்.பள்ளிக்கு வரும் போது வெந்நிற ஹிஜாப் அணிந்தே வருவர்..பெரும்பாலான பெண்கள் தனியாக சொந்த வாகனங்களில் வருவர்.குடும்பத்தோடு வருவோரும் உண்டு..தராவீஹ் முடிந்த கையோடு ஹிஜாபை களைந்து டீசேர்ட் - டெனிமுக்கு மாறி விடுவர்..தராவீஹ் பின்னர் நிறைந்து வழியும் கடைத் தெருக்களில் இந்தக் கோலத்தில்தான் அவர்களை காணமுடியும்..எங்கள் நாடு எவ்வளோ மேல்!!
பள்ளிவாசல்களில் தராவீஹில் சிறுவர்கள் செட்டு சேர்ந்து விடுவார்கள்..நான் எட்டு ரக்கஅத் தொழுதுவிட்டு நண்பர்களுக்காக காத்திருக்கும் வேளைகளில் இவர்களின் குறும்புகளை ரசிப்பேன்..எல்லா இடங்களிலும் சிறுவர்களின் இயல்புகள் ஒன்றுபோலவே இருக்கின்றது...

அதே போல் இங்குள்ள இரவுச் சந்தைப் பற்றியும் இரண்டு வார்த்தை சொல்லியாக வேண்டும்..கடோங் பஸார் என்று அவ்விடத்தை அழைக்கின்றனர்..இங்கு புருனையனின் தேசிய உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் வாங்கலாம்..விஸேஸமாக உணவுப் பொருட்கள்..எமது ஹொஸ்டலுக்கு 200 மீட்டர் தொலைவில்தான் இச்சந்தை உள்ளது.
ப்ரபா அயாமா? சிக்கன் எவ்வளவு - நான் வினவ '' சது ரிங்கிட்'' - ஒரு டொலர் என்றாள்..பொரித்த முழுக் கோழி - ஒரு டொலருக்கு லாபமல்லவா - 80 ரூபா...நான் வாங்கிக் கொண்டேன்..அன்று மலேசிய தல்ஹாவுடன் கடொங் சந்தைக்குப் போயிருந்தேன்...அவனது கணக்கில் கரும்புச் சாறும் , பொபய்னும் வாங்கித் தந்தான்...ஹ்ம் அங்கு மாங்காய்..வாழைப் பழம் துரியங்..எல்லாம் உண்டு...
என்றாலும் நான் அவதானத்துடன்தான் நடந்து கொண்டேன்..எங்காவது பாம்பு கறி தவளைக் கறி இருக்கிறதா?யாருக்குத் தெரியும் இந்த ஏரியாவில் -இது சகஜம்...திரும்பி வரும் போது தல்ஹாவிடம் கேட்டேன்..தாய்லாந்து..இந்தோனேசிய போன்று இங்கு பாம்புக் கறி உண்பவர்கள் இருக்கிறார்களா? யா..அஹ்கீ..கய்ப யும்கின் ..ஆஉலாஇ குல்லுவும் முஸ்லிமூன் - பயப்படாதே என்று தைரியமூட்டினான்.

5 ஜன., 2010


உறவுகள் (சிறுகதை) - கெகிறாவை இஸ்மத்.

2008 ஆகஸ்ட் - மருதானை

அந்தி நேரம் பெய்த மழையின் எச்சமாய் வீதியெங்கும் இன்னும் ஈரம் படர்ந்திருந்தது. வாகன நெரிசல்,மக்களின் ஓட்டம், வீதியோர வியாபாரிகளின் கூப்பாடுகள் எதுவுமின்றி நகரம் ஓய்வெடுக்கத் தொடங்கியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் செல்லும் ஆட்டோக்களின் சத்தத்திற்கு மேலாக ஹோட்டல்களில் கொத்தடிக்கும் சப்தம் மட்டும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. மருதானையில் பெயர் போன அந்த சைவக் கடைக்குள் நான் நுழைந்தேன்.
பகல் முழுதும் நிரம்பி வழியும் சனக்கூட்டம் கடைக்குள் இல்லை.தூரத்து மேசையில் ஓர் இளம் ஜோடி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பூவோடும் பொட்டொடும் அந்தப் பெண் இருந்தாள். புதிதாக திருமணம் முடித்திருக்க வேண்டும். அல்லது கோயிலுக்கு போய் திரும்பும் பயணமாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தால் எனக்கென்ன?. நான் ஒரு டம்ளர் பசும் பால் ஓடர் செய்தேன்.
இந்த ஹோட்டலின் பசும்பாலுக்கு ஒரு தனிச் சுவை இருக்கிறது. ஒரு கிலாஸ் பாலும் ஒரு வடையும் போதும் கையுள்ள காசுக்கு வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். வழமையாக இல்லாவிட்டாலும் அவசரத்துக்கு நான் தஞ்சம் புகுவது இந்த கடைக்குள்தான்.
பால் வரும் வரை நான் வடையைக் கடிக்கத் தொடங்கினேன். சட்னியை வாயில் வைத்த போது புளித்தது..கடை மூடும் நேரத்துக்கு சாப்பிட வந்தால் புளிக்காமல் என்ன செய்யும்?? சட்னியை ஒதுக்கி விட்டு வடையை மட்டும் சுவைக்கத் தொடங்கினேன். வெய்டர் பாலோடு வந்தான்.
கூடவே பின்னால் ஒரு பெண் குரல்
'' தம்பி எனக்கு ரெண்டு தோசை சுத்தி தாப்பா'' –
அறுபதை தாண்டும் வயது. கொஞ்சம் பருமன் என்றாலும் உடலின் தளர்ச்சி முகத்தில் தெரிந்தது..உடுத்தியிருந்த ஒயில் சேலையை சரி செய்து கொண்டே தலைக்கும் சேர்த்து முக்காடிட்டுக் கொண்டாள்.
''ஏன் கெழவி நீ உள்ளால சாப்பிடலயா''?
எனக்கு பால் டம்ளரை வைத்து விட்டு வெய்டர் அவளிடம் கேட்டான். அவளும் இதே ஹோட்டலில் வேலை செய்பவள் என்று தெரிந்தது..
சமையல் வேலைகளுக்கு உதவி செய்பவளாக இருக்கலாம்.
‘’ இல்லப்பா என் பேத்தி ..அவ எனக்காக காத்துட்டு இருப்பா..ஏம்பா பத்து மணி பஸ் போகல்லயே இன்னும்?''
‘’இல்ல..இல்ல-அவசரப்படாத..இந்தா'' தோசை பார்சலை அவள் கையில் கொடுத்தான்.
''ஏம்பா சாம்பாரு வைச்சியா?
‘’ஓம் கெழவி..அது சரி- நாளைக்கும் லேட்டாகி வந்துட்டு பின்ன காரணம் சொல்லாத என்ன.?''
‘’ நான் என்னடாப்பா செய்ய - எல்லாம் என்ட தல நஸீபு..நாஸமாப் போன அவள்ட அப்பன் நல்லா இருந்தா நான் ஏன் இத்தனை கஸ்டப்படனும்..பெத்த புள்ள ஒன்னு இருக்குன்ட ஞாபகமாச்சும் அவனுக்கு இருக்கா..'' கிழவியின் கண்கள் நிரம்பியது.
‘’சரி கெழவி கௌம்பு..பஸ் போயிடப் போகுது'' அவள் கதையைக் கேட்க வெய்டருக்கு நேரம் இருக்கவில்லை.
கெஸியர் மேசையில் அவள் தனது நாள் கூலியை பெற்றுக் கொள்வது தெரிந்தது. சரியாக நூற்றைம்பது ரூபாய். அதிலிருந்து தோசைக்கு அவள் காசு கொடுப்பதும் கெஸியரில் இருந்தவன் வேண்டாம் என்று சொல்வதும் தெரிந்தது. அவள் தன் பொலிவிழந்த தோல் பைக்குள் காசையும் தன் அன்பு பேத்திக்கான தோசைப் பார்சலையும் பத்திரமாய் திணித்தாள்.

******************************************************************************

2009 ஜூலை - தோஹா – கட்டார்

பனார் மஸ்ஜிதில் அஸர் தொழுகையை முடித்து விட்டு நான் இஸ்லாமிய நிலைய காரியாலய அறைக்குள் அமர்ந்திருந்தேன். அரபு தேசத்து வெயிலுக்கு அறையின் ஏ.சீ ஆறுதல் அளித்தது. அன்று வியாழக் கிழமை என்பதால் இஸாவுக்குப் பின் பொது பயான் நிகழ்ச்சி இருந்தது. செய்வதற்கு பெரிதாக எதுவும் இருக்கவில்லை என்பதால் புதிதாக வந்திருந்த அல்ஹஸனாத்திற்குள் நான் மூழ்கியிருந்தேன்..அப்போதுதான் அந்த மனிதர் ஸலாம் கூறிக் கொண்டு அறைக்குள் நுழைந்தார்..அவர் ஒரு இந்தியர்: தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.
பக்கத்து அறையில் இருக்கும் இந்தோ-கட்டார் இஸ்லாமிய நிலையத்தில் அவரை இதற்கு முன் ஒரு தடவைப் பார்த்திருக்கிறேன்..
‘’ பக்கத்து ஆபிஸ்ல யாரும் இல்லையா?’’ அவர் வினவினார்.
‘’ஹ்ம்..அவங்க எப்படியும் இஸாவுக்கு பின்னாலதான் ஆபிஸ திறப்பாங்க...நாளைக்கும் சனிக் கிழமையும் முழு நாளும் திறந்திருக்கும்..உங்களுக்கு ஏதாச்சும் புத்தகங்கள் எடுக்கனுமா?’’ என்றேன்.
‘’இல்லை..என்ன அவங்களுக்கு நல்லா தெரியும்..பாய கொஞ்சம் சந்திக்கனும். அதுதான்’’. என்றார்
அவர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கிறார் என்பது புரிந்தது..
‘’ தம்பி எனக்கு ஹார்ட் வருத்தம்...இங்க உள்ள எல்லோருக்கும் தெரியும்..அவங்க செய்ற உதவியாலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்'' - அவர் பொய்ச் சொல்லவில்லை என்பது தெரிந்தது..ஏ.சீக் காற்றையும் தாண்டி வியர்வை அவரை நனைத்திருந்தது. நான் விசிறியையும் சுழலவிட்டேன்..
‘’ ஹார்ட் வருத்தத்தோட எப்படி வேலை செய்றீங்க?? நாட்டுக்கு போறதுதானே??’’ - என் கேள்வியில் அனுதாபம் இருந்தது.
‘’ போகலாம்தான் ..ஆனா அங்கப் போய் என்ன செய்றது?? நான் ஒரு வீட்டுல தோட்ட வேலை செய்றன்..அந்த அரபி கொஞ்சம் நல்லவர்..நான் நோயாளின்னு தெரிஞ்சி என்ன நாட்டுக்குப் போகச் சொன்னாரு..நான்தான் இன்னும் ஒரே ஒரு வருஸத்துக்கு வேலை செய்யறன்னு சொல்லியிருக்கேன்..அல்லாஹ்ட உதவியால ஒரு வருஸத்துக்கு அவன் என்ன உசிரோட வைச்சிருந்தான் என்றா எனக்குப் போதும்'' அவர் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்..கண்கள் பனித்திருந்தன.
அவரிடம் மேலும் கேள்விகள் கேட்டு அவரைச் சோர்வடைய வைக்க நான் விரும்பவில்லை. அவராகவே தொடர்ந்தார்.
‘’இன்னும் ஒரே ஒரு வருஸம் தம்பி..ஏன்ட மூத்த மகன் கொலேஜ் முடிச்சிருவான்.பிறகு அவன் குடும்பத்த காப்பாத்துவான். அதுக்குள்ள ஏன்ட உசிரு போயிடும் என்றா அவனால படிப்ப முடிக்க முடியாம போயிடும்..ஆண்டவனே..ரப்பே!!
அவர் கைகள் உயர்த்தி பிரார்த்திப்பது கேட்டது..அவர் இறைவனிடம் ஒரே ஒரு வருஸத்திற்கு தன் ஆயுளை நீடிக்குமாறு கேட்டது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..மூத்தவனின் படிப்பு முடியும் வரை இதய நோயோடு அரபு வெயிலில் வேலைச் செய்யவே அந்த ஒரு வருட ஆயுள்..

************************************************************************************


2009 டிசம்பர் - கடோங் -புரூனை


அன்று விடுதி உணவகத்தில் சாப்பாடு சரியில்லை என்ற படியால் நானும் ஜமாலும் தல்ஹாவும் வெளியில் சாப்பிடக் கிளம்பினோம். ஜமால் இந்தோனேசிய மாணவன். தல்ஹா மலேசியாவைச் சேர்ந்தவன். பாதையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து விட்டு ஜமால் இப்படிச் சொன்னான் :
''யா அகீ!! எங்களுக்கும் வாகனமொன்று இருந்தால் இப்படி நடக்கத் தேவையில்லை..பாரு நாங்க மட்டும்தான் நடந்து போகிறோம்''. அவனது பிரச்சினை அதுவாக இருந்தது..
கடோங் பிரதான பாலத்தைத் தாண்டி நாம் ‘’மோல் சுப்பர் மார்க்கட்டை’’ அடைந்தோம். எமது விடுதியில் இருந்து ஒரு முந்நூறு மீட்டர் தொலைவில்தான் ''மோல் சுப்பர் மார்கட்'' இருக்கிறது.. நாங்களும் நாகரீக உலகத்தில்தான் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஏற்ப மேற்கின் அத்தனைக் குப்பைகளையும் இறக்குமதி செய்து அந்த சுப்பர் மார்க்கட்டை அசிங்கப்படுத்தி - மன்னிக்கவும் - அழகுபடுத்தியிருந்தனர்.
கட்டடத்தின் மூன்றாம் மாடியை உணவகங்களுக்கு என்று ஒதுக்கியிருந்தனர். சுமார் இருபதுக்கு மேற்பட்ட உணவகங்கள் சுற்றி வர நடுவில் ஒரு ஐநூறு பேர் சாப்பிடுவதற்கான வசதி. ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு நாட்டு உணவுக்கென்று பிரத்தியேகமானவை.
இந்திய. அரபு நாட்டு உணவுகள் கிடைக்கும் உணவகங்கள் இருந்தாலும் நாம் வழமையாக சாப்பிடும் உணவகம் ஒன்றிருந்தது. ‘’ ரீஸா உணவகம்’’. எமது விடுதி உணவகத்தை நடத்தி வருபவர்களே இதனையும் நடத்தி வந்தனர்.எனவே எமது யுனிவர்ஸிட்டி கூப்பனைப் பயன்படுத்தி குறைந்த விலையில் இங்கு சாப்பிட முடியும்..
உணவோடு நாம் மூவரும் ஒரு மேசையைப் பிடித்து அமர்ந்தோம்..முதல் கவளத்தை வாய்க்குள் இட்டு நிமிரும் போதுதான் எனக்கு அந்த அற்புத காட்சி கண்ணில்பட்டது.
நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர்ப்புற மேசையில் ஒரு மூதாட்டி. எண்பதை தாண்டும் வயசு. சுருங்கி: வெளிரிய தோல். சிறுத்துப் போன: பார்வை மறந்த கண்கள். உடலில் சிறு நடுக்கம்.
அவளுக்கு பக்கத்தில் நாப்பத்தைந்து அல்லது ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒருவர் அவளுக்கு கொஞ்ஞம் கொஞ்சமாய் உணவைப் பருக்கிக் கொண்டிருந்தார். அவளது மகனாக இருக்க வேண்டும்..ஆயிரத்தில் ஒருவராகவே அவர் எனக்குப்பட்டார்..
வயசு போனால் வீட்டோடு முடக்கி வைக்கும் இந்த காலத்தில் தன் தாயை வெளியில் அழைத்து வந்து தன் கையால் உணவு பருக்கும் காட்சியை வேறெப்படிச் சொல்வது??
அந்த மூதாட்டியால் மூன்று கவளங்களுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. அந்த மூன்று கவள உணவிலும் அவள் பட்ட திருப்தி அவளது முகத்தில் தெரிந்தது.
***
விடுதிக்கு திரும்பிய நான் அன்றைய என் நாட்குறிப்பில் இப்படி எழுதினேன்.
அன்புதான் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
உறவுகள்தான் வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன.
ஒரு கோடி அன்போடும் பல நூறு உறவுகளோடும்
எம்மைப் படைத்த இறைவனே நீ மகா கருணையாளன்.