-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
ஆய்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே, 2011

தஜ்ஜாலின் வருகையை மௌலானா மௌதூதி மறுக்கிறாரா?? பதில் - 2

இஸ்மத் அலி



'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி – பதில் தருமா ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற தலைப்பில் SLTJ அமைப்பினர் தமது 'அழைப்பு' ஏப்ரல் மாத இதழில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அசத்தியங்களை விளக்கி 'நுனிப்புல் மேயும் ஸலபித்துவ ஆய்வுகள் - மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறாரா?' எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். இக்கட்டுரை சத்தியத்தை நேசிக்கின்ற , அதை தேடுவதில் ஆர்வமுள்ள, அதை ஏற்றுக் கொள்கின்ற நல்ல உள்ளங்களுக்கு தெளிவை ஏற்படுத்தியிருந்தால் - அல்ஹம்துலில்லாஹ் - புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.


என்றாலும் சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்த பலர் 'மறுப்பெழுதி மானத்தை வாங்குகிறார்கள்...ஏதாவது செய்யுங்கள்' என்று அழாத குறையாக விண்ணப்பித்த வேண்டுகோள்களுக்கிணங்க 'நான் சில நாட்களாய் ஊரில் இல்லை..விரைவில் பதில் தருகின்றேன்' என்று அவர்களை ஆற்றுப்படுத்திவிட்டு ஒரு வார காலமாய் சிந்தித்து சிந்தித்து கடைசியில் 'வரிக்கு வரி பதில்' என்ற பெயரில் ஏற்கனவே சுட்டுப் புளித்துப் போன அப்பத்தை திருப்பிப் போட்டு 'புதுசா சுட்டப் பலகாரம்' என்று ஒரு கட்டுரையை எழுதி தமது ரசிகர் மன்றத்தினரை திருப்திப்படுத்த முனைந்திருக்கிறார் சகோ: ரஸ்மின். (அல்லாஹூத்தஆலா அவரின் இல்மையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் விரிவுபடுத்துவானாக)


சகோ: ரஸ்மின் எழுதிய கட்டுரை இவர்கள் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் சுபாவம் இவர்களிடம் துளியும் இல்லை என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் நாம் ஆதாரத்தைக் காட்டிய பின்னரும் 'வரிக்கு வரி பதில் தர வேண்டியவர்கள், மலுப்பியிருக்கிறார்கள்' என்று சொல்லி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை – அவன் தோன்றி விட்டானா? என்ற விடயத்தைதான் அவர் மறுக்கிறார் என்பதை நாம் எமது முதற்கட்டுரையில் தெளிவாக விளக்கியிருந்தோம். சகோதரர்கள் இதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு இது பற்றி சமரசம் மார்ச், ஏப்ரல் மாத இதழ்களில் வெளியான கட்டுரையின் பிரதிகளை இங்கு இணைத்துள்ளோம். இக்கட்டுரையின் அடுத்த பந்தியை வாசிக்க முன்னர் இவ்விரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்குமாறு வினயமாக வேண்டுகின்றோம்.










இவ்விரு கட்டுரைகளையும் முழுமையாக வாசித்திருந்தால் இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் எவ்வளவு அசத்தியமானவை என்பதையும், நுனிப் புல் மேய்ந்தவர்கள் யார்? பனிப் புல் நக்கியவர்கள் யார்? என்பதையும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.


முதல் கட்டுரையில் மௌலானா மௌதூதி கூறிய 'தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்களிடையே இவ்வாரான செய்திகள் பிரபலமானதற்கான பொருப்பு இஸ்லாம் மீது இல்லை. அதில் ஏதாவது ஒன்று தவறு என்று நிரூபனமானாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை' என்ற கருத்தானது மௌலானாவின் தர்ஜூமானுல் குர்ஆன் சஞ்சிகையில் சகோதர் ஒருவர் கேட்ட நீண்ட கேள்வித் தொடரில் 'தஜ்ஜால் எங்கேயோ இருக்கிறான் என்பதுதான் பிரபலமான கருத்து. அந்த இடம் எது? இன்று உலகில் மூலை முடுக்கெல்லாம் மனிதன் அலசிப் பார்த்து உள்ளான். இருந்தும் தஜ்ஜால் பற்றிய விவரம் ஏன் கிடைக்கவில்லை? என்ற கேள்விக்கான பதிலாகவே அமைந்தது என்பது கட்டுரையை வாசித்த உங்களுக்கு புரிந்திருக்கும்.


ஆனால் இந்த பதில் மௌலானா தஜ்ஜாலின் வருகையை முழுமையாக மறுக்கிறார் என்ற கருத்தை ஏற்படுத்தியது. இதனை வெளிப்படுத்தி இன்னுமொருவர் அடுத்த தர்ஜூமானுல் குர்ஆன் கேள்வி – பதில் பகுதியில் பின்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

'தஜ்ஜால் பற்றிய செய்திகளெல்லாம் கதைகள், அதற்கு ஷரீஅத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. என பதில் அளித்திருந்தீர்கள். ஆனால் எனக்குத் தெரிந்த வகையில் குறைந்த பட்சம் முப்பது அறிவிப்புக்களில் தஜ்ஜால் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன...'
என்று வினவியிருந்தார்.

இதற்கு மௌலானா மௌதூதி அளித்த பதிலானது மிகத் தெளிவாக அவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை என்பதைக் காட்டுகின்றது.

' தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதைதான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் 'மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்.

தஜ்ஜால் பற்றிக் கூறப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் அனைத்து நபிமொழிகளையும் ஒட்டுமொத்தமாக பார்வையிடும் போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெரும் பொய்யன் தோன்ற இருக்கிறான், அவனின் குணங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும், அவன் சில தனித் தன்மைகளைப் பெற்றிருப்பான் என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு. எனினும் அவன் எப்போது தோன்றுவான், எங்கே தோன்றுவான், நபியின் காலத்திலேயே பிறந்துவிட்டானா? அல்லது நபியின் காலத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றுவானா? போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை'


மௌலானாவின் இக் கூற்று வாசிப்பறிவுள்ள சிறு பிள்ளைக் கூட அவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை, அவன் தோன்றிவிட்டானா என்ற விடயத்திலேயே சந்தேகப்படுகின்றார் என்பதை புரிந்து கொள்ளும். இதற்கு மேலும் ஆதாரம் காட்டும் வகையில் அவரின் தப்ஸீரில் சூறதுல் அஹ்சாப் 40 வசனத்திற்கான நீண்ட விளக்க உரையின் பின்னர் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் பந்தியையும் நாம் முதற் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

' நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும், அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும், அது சமயம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும், அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும், அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்'
(தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு – பக்கம் : 78)




ஆனால் விதண்டாவாதிகள் இதற்கு பின்னரும் 'இல்லை..இல்லை...அவர் தஜ்ஜாலின் வருகையை முற்றாக மறுக்கிறார்..அது பற்றிய எல்லா ஹதீஸ்களையும் மறுக்கிறார்' என்று மல்லுக்கட்ட வந்தால் நாமென்ன செய்வது?? 'சரி நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலென்றே வைத்துக் கொள்ளுங்கள் - மஅஸ்ஸலாம்' என்று சொல்லிச் செல்வதுதான் குர்ஆன் சொல்லும் வழிமுறை.



தஜ்ஜால் தோன்றிவிட்டானா??


இது அல்லாஹூக்கு மட்டுமே தெரிந்த விடயம். தஜ்ஜாலின் குழப்பம், அவனின் பண்புகள், அவன் தோன்றவிருக்கும் இடம் என்பவை நபியவர்களுக்கு வஹியின் அறிவைக் கொண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தோன்றிவிட்டானா என்பது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு ஏலவே வஹி மூலம் தஜ்ஜால் பற்றி அறிவிக்கப்பட்ட அடையாளங்கள் வெளிப்பட்ட சில நபர்களை நபியவர்கள் தஜ்ஜாலாக இருப்பானோ என்று சந்தேகித்தார்கள். அந்த வகையிலேயே இப்னு ஸியாத் (இப்னு ஸாஇத், இப்னு ஸய்யாத் என்றும் சில ஹதீஸ்களில் வந்துள்ளன) எனும் சிறுவன் விடயத்திலும் நபியவர்கள் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள். எனவேதான் ஸஹாபாக்களுக்கு நபியவர்களின் மரணத்தின் பின்பும் இப்னு சியாத் மீது சந்தேகம் இருந்தது. இமாம் முஸ்லிம் இது தொடர்பான ஹதீஸ்களை கிதாபுல் பிதன் அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸ்கள் இப்னு ஸியாதை நபியவர்கள் தஜ்ஜால் என்று நினைத்ததையும், பிறகு அவர்களின் எண்ணம் சரியானதாக இருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.


அந்த ஹதீஸ்களில் சிலவற்றை இங்கு விளக்கத்திற்காக குறிப்பிடுகின்றோம். (எல்லா ஹதீஸ்களையும் குறிப்பிடுவதை விரிவஞ்சி தவிர்ந்து கொள்கிறோம்)

1) அப்துல்லாஹ் ரழியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள் : நாம் நபியவர்களுடன் சில சிறுவர்களை கடந்து சென்றோம். எம்மைக் கண்ட சிறுவர்கள் கலைந்து செல்ல இப்னு ஸியாத் மாத்திரம் தானிருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான். அவனது செயல் நபியவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவனிடம் சென்ற நபியவர்கள் 'நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்றுபகர்கின்றாயா?' என்று வினவ, அதற்கவன் 'இல்லை. மாறாக நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சான்றுபகரும்' என்று பதிலளித்தான். அப்போது உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் 'இறை தூதரே விட்டுவிடுங்கள், அவனை நான் கொன்றுவிடுகின்றேன்' என்றார்கள். அதற்கு நபியவர்கள் 'நீர் நினைக்கின்ற ஆளாக அவனிருந்தால் உம்மால் அவனைக் கொல்ல முடியாது' (ஹதீஸ் இலக்கம் : 7528)


2) ஸஈத் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இப்னு ஸியாதை நபியவர்கள் மதீனாவின் வீதியொன்றில் சந்தித்தார்கள். அவர்களோடு உமர், அபூபக்ர் ரழியல்லாஹூ அன்ஹூம் ஆகியோரும் இருந்தனர். அப்போது நபிகளார் அவனிடம் 'நான் இறைதூதர் என்று நீ சான்றுபகர்கின்றாயா? என்று வினவ, 'நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சான்றுபகர்கின்றீரா?' என்று பதிலளித்தான். அதற்கு நபியவர்கள் 'நான் அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவனது வேதங்களையும் ஈமான் கொண்டிருக்கிறேன். சரி இப்போது நீ எதனைக் காண்கிறாய்' என்று வினவினார்கள். அதற்கு அவன் 'நீரில் மேலிருக்கும் ஒர் அரியாசணத்தைக் காண்கிறேன்' என்றான். 'கடல் நீரின் மீதிருக்கும் இப்லீஸின் அரியாசணத்தைதான் நீ காண்கிறாய்..வேறு எதனைக் காண்கிறாய்' என்று நபிகளார் கூறியதற்கு 'இரண்டு உண்மையாளர்களையும், ஒரு பொய்யனையும் அல்லது ஓர் உண்மையாளனையும் இரண்டு பொய்யர்களையும் காண்கிறேன்' என்று அவன் பதிலளித்தான். 'அவனுக்கு குழப்பமேற்பட்டுவிட்டது..அவனை விட்டுவிடுங்கள்' என்று நபிகளார் கூறிச் சென்றார்கள்.(ஹதீஸ் இலக்கம் : 7530)


3) முஹம்மத் பின் முன்திர் அறிவிக்கின்றார்: ஜாபிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் 'இப்னு ஸாஇத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுபவராக இருந்தார். அவரிடம் நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நீர் சொல்கிறீரா? என்று வினவ, 'ஆம். நபியவர்களின் முன்னிலையில் உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவ்வாறு சத்தியம் செய்து கூறுபவராக இருந்தார் – அதனை நபியவர்கள் மறுக்கவில்லை' என்று பதிலளித்தார். (ஹதீஸ் இலக்கம் : 7537)


மேற் கூறிய ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் ஏற்கனவே தனக்கு அறிவிக்கப்பட்ட வஹியின் அடிப்படையில் , தஜ்ஜாலின் பண்புகள் வெளிப்பட்ட இப்னு ஸியாதை தஜ்ஜாலாக இருக்கலாம் என்று அனுமானித்தார்கள் என்பதையும், அந்த சந்தேகம் ஸஹாபாக்களிடம் இருந்தது என்பதையும், அது பற்றி தனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படாமையால் அவர்களின் சந்தேகம் பிழையானது என்பதை உணர்த்தாமலும் நபியவர்கள் இருந்தார்கள் என்பதையும், இச்சந்தேகம் நபிகளாரின் மரணத்தின் பின்பும் தொடர்ந்தது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.


ஆனால், நபிகளார் அனுமானித்தது போன்றோ, அதன் அடிப்படையில் சஹாபாக்கள் சந்தேகம் கொண்டது போலவோ இப்னு ஸியாதின் விடயம் அமையவில்லை. இதனை இமாம் முஸ்லிம் அறிவிக்கும் அதே ஹதீஸ்களின் தொடரில் பதிவு செய்துள்ள பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.


ஸஈத் அல் குத்ரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இப்னு ஸாஇத்துடன் மக்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவன் 'நான் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் நான்தான் தஜ்ஜால் என்று நினைக்கிறார்கள். 'தஜ்ஜால_க்க குழந்தைகள் இருக்காது' என்று நபிகளார் சொன்னதை நீர் கேள்விப்பட்டதில்லையா?' என்று வினவினான். அதற்கு நான் 'ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்' என்றேன். பிறகு 'தஜ்ஜால் மக்கா, மதீனா நகரங்களுக்கு நுழைய முடியாது என்று நபியவர்கள் சொன்னதை நீர் கேள்விப்பட்டதில்லையா?' என்று வினவினான். அதற்கு நான் 'ஆம் ..கேட்டிருக்கிறேன்' என்று சொன்னேன். அதற்கு அவன் ' நான் மதீனாவில் பிறந்தவன். இதோ நான் மக்கா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்' என்றான். பிறகு கடைசியாக என்னிடம் அவன் இப்படிக் கூறினான். 'அறிந்து கொள்! அவனது பிறப்பைப் பற்றியும், அவனது இடத்தைப் பற்றியும், அவனது பெற்றோர் பற்றியும், அவன் எங்குள்ளான் என்பதையும் நான் அறிவேன்' என்றான். பின்னர் அது பற்றி தனக்கு குழப்பமேற்பட்டுவிட்டது என்றும் கூறினான்.

இந்த இப்னு ஸியாத் சூனியக்காரனாக இருந்தான் அல்லது குறிசொல்பவனாக இருந்தான், பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உமையாக்களின் ஆட்சியில் நடைபெற்ற ஒரு போரில் கலந்து கொண்டு உயிரிழந்தான் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.

இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே மௌலானா மௌதூதி இப்னு ஸியாத் விடயத்தில் நபிகளார் தெரிவித்த கருத்து அனுமானம் என்றும் அந்த அனுமானம் சரியானதாக அமையவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். இதே அடிப்படையில்தான் தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தமது கடற்பிரயாணத்தில் கண்ட உருவம் பற்றிய விடயத்திலும் அது தஜ்ஜாலாக இருக்க முடியுமோ என்று நபிகளார் சந்தேகித்தார்கள். அதுதான் தஜ்ஜால் என்று அவர்கள் உறுதியாகக் குறிப்பிடவில்லை. இதனை குறித்த ஹதீஸின் போக்கிலிருந்தும், நபிகளார் இந்த செய்தியை அறிவித்த பின்னரும் இப்னு ஸியாத் மீது சஹாபாக்களுக்கிருந்த சந்தேகமும் உறுதிப்படுத்துகின்றன.
தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் குறிப்பிட்ட நிகழ்வு 'தாம் ஏற்கனவே கூறிய தஜ்ஜால் பற்றிய விடயத்தோடு உடன்படுவதால், அதனால் கவரப்பட்டே தாம் இச்செய்தியை அறிவிப்பதாக நபிகளார் குறிப்பிட்டது அந்த ஹதீஸில் நேரடியாகவே வந்திருக்கிறது.

« فَإِنَّهُ أَعْجَبَنِى حَدِيثُ تَمِيمٍ أَنَّهُ وَافَقَ الَّذِى كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْهُ وَعَنِ الْمَدِينَةِ وَمَكَّةَ أَلاَ إِنَّهُ فِى بَحْرِ الشَّامِ أَوْ بَحْرِ الْيَمَنِ لاَ بَلْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ ما هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ »

இதுதான் இமாம் முஸ்லிம் தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ விடயத்தில் அறிவிக்கும் ஹதீஸின் இறுதிப் பகுதி. (ஹதீஸ் இலக்கம் : 7573) இதன் கருத்தாவது :
'நான் உங்களுக்கு தஜ்ஜால், மதீனா, மக்கா பற்றி அறிவித்த விடயங்களோடு உடன்படும் வகையில் தமீம் சொன்ன செய்தி என்னைக் கவர்ந்தது. அறிந்து கொள்ளுங்கள் !! அவன் சிரியக் கடலில் இல்லை யமன் கடலில் இருக்கின்றான். இல்லை..அவன் கிழக்குப் புறத்திலிருந்து வருவான்..கிழக்குப் புறமிருந்து வருவான்...கிழக்குப் புறமிருந்து வருவான்'

தமீம் அத்தாரீ சொன்ன உருவம்தான் தஜ்ஜால் என்பதை நபிகளார் தெளிவாக வஹியின் அடிப்படையில் அறிந்திருந்தால் - அதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இங்கு மூன்று இடங்களைக் குறிப்பிட்டு – அதிலும் கிழக்குப் பகுதியை அழுத்தம் கொடுத்து நபிகளார் தஜ்ஜால் தோன்றப் போகும் இடத்தை நபிகளார் அறிவித்தது தமீம் அத்தாரீ கண்ட உருவம்தான் தஜ்ஜால் என்பதை நபிகளார் உறுதியாகக் குறிப்பிடவில்லை என்பதைக் காட்டுகின்றது.


இத்தகைய விளக்கத்தின் அடிப்படையிலேயே மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் தோன்றிவிட்டான் என்ற செய்திக்கு ஷரீஅத்தில் எந்த அந்தஸ்த்தும் இல்லை என்றும் அவை நபிகளாரின் அனுமானமே தவிர வஹியல்ல என்றும் கூறினார்கள். இதனால் நபிகளாரின் நுபுத்துவத்தின் மீதோ, அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் மீதோ துளியும் களங்கம் ஏற்பட்டுவிடாது என்பதையும் அக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.


எனவே தஜ்ஜாலின் வருகையையோ, அவன் ஏற்படுத்தப் போகும் பித்னாவையோ மௌலானா மௌதூதி மறுக்கவில்லை என்பதையும், தஜ்ஜால் தோன்றி விட்டானா என்ற விடயத்திலேயே அவர் சந்தேகப்படுகின்றார் என்பதையும், மௌலானா மௌதூதி மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுக்கள் காழ்ப்புணர்வினதும், நுனிப் புல் மேயும் ஆய்வாளர்களின் வெற்று விமர்சனங்களுமே என்பதை சுயமாக சிந்திப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.


இறுதியாக...

வரிக்கு வரி பதில் என்ற பெயரில் எதையோ எழுதி தமது முரீதுகளை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகளை இனியாவது கைவிடுங்கள். இத்தகைய ஒரு பதிலை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவேதான் 'ஏன் இதற்கு முன்னர் சொன்னவைகளுக்கு மௌனமாக இருந்து விட்டு இதற்கு மட்டும் பதில்' என்று கேட்டிருக்கிறார்கள். இது இயக்க விசுவாசத்தினாலோ மௌலானா மீது கொண்ட பக்தியினாலோ அல்ல. மௌலானாவின் தப்ஸீரை ஆய்வு செய்பவன் என்ற வகையிலும், இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு யுக புருஷர் என்ற வகையிலும் சிலரின் தவளை முழக்கங்களால் அவர் பற்றிய நல்லெண்ணம் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே எழுதப்பட்டது. இத்தகைய நல்லெண்ணம் உங்கள் பார்வையில் பக்தி என்று படலாம். ஆனால் அது அல்-குர்ஆன் சொல்லும் நேசம் என்பதுதான் நாம் விளங்கிக் கொண்டது.

وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ


யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமீன்களையும் நேசத்துக்குரியவர்களாக ஆக்கிக் கொள்கின்றனரோ, நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியனர்தான் வெற்றி பெறுவர்'

(அல்- மாஇதா : 56) –

ஈமான் கொண்டு, அதற்காகாவே வாழ்வை அர்ப்பணித்த ஒரு மனிதர் மீது நாம் கொண்டிருக்கின்ற நேசம் - பக்தியோ, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

அடுத்து...உங்கள் ஏனைய கேள்விகளுக்கு எங்களிடம் மறுப்புக்கள் இல்லாமலில்லை. ஆனால் உங்களுக்கு பதில் சொல்லித்தான் நாங்கள் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. எங்களை விசாரிப்பதற்கும், தீர்ப்பு சொல்வதற்கும் அல்லாஹ் போதுமானவன். மேடைப் போட்டு விவாதிக்க அழைத்தும் தயக்கம் காட்டுவதேன்? அசத்தியத்தில் இருப்பதனால்தானே? என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். மேடை போட்டு விவாதிப்பதை தஃவா அணுகுமுறையாகவோ, நபிகளாரின் சுன்னாவாகவோ நாம் கருதவில்லை. நீங்கள் மேடை போட்டு நடத்திய விவாதங்களின் பயன்கள் என்ன என்பதை முழுச் சமூகமும் நன்கறியும். காபிர்களோடு ஆயுதம் தூக்கிப் போராட அனுமதித்த அல்லாஹூத்தஆலா அவர்களை நாவினால் நோகடிப்பதை நபிகளாருக்கோ, ஸஹாபாக்களுக்கோ அனுமதிக்கவில்லை. 'அழகிய முறையில் வாதிடுங்கள்' என்பதுதான் அல்லாஹூத்தஆலா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த உபதேசம். உங்கள் வாதட்ட முறைமை எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும்.


அடுத்து...உங்கள் அணியில் அரைகுறையாகப் படித்த பல பேர் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடயம். ஆனால் கட்டுரையாளர் தன்னை M.I.Sc என்று அடையாளப்படுத்திக் கொள்பவராக இருந்தும் ஆய்வு முறைமை, ஆய்வு ஒழுக்கம் பற்றி தெரியாமல் இருப்பது கவலையளிக்கின்றது. காரணம் மௌலானாவின் பந்தியொன்றை விளக்க நான் அடைப்புக் குறியிட்டு சில வசனங்களை சேர்ததை - இது விளக்கமளிக்கும் ஒரு முறை என்பதை தெரியாமல் 'மௌதூதியைக் காப்பாற்றும்' முயற்சி என்று சொல்லியிருப்பதுதான்.


இந்த பதிலைப் பார்த்த பின்பும் 'வரிக்கு வரி' பதில் கேட்டோம் - மலுப்புகிறார்கள்' என்று சொன்னால் உங்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் சுயமாக சிந்திப்பவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதையும், ஆயிரம் தடவை 'விஷம்...விஷம்' என்று மந்திரித்தாலும் தூய பால் பால்தான் என்பதையும் அது விஷமாகி விடாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதில் உங்களை நோகடித்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். மனந் திறந்த கலந்துரையாடலுக்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். அல்லாஹ் உங்களினதும் எங்களினதும் அமல்களை ஏற்று அங்கீகரிப்பானாக.

23 மே, 2011

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட"ஸலபித்துவம்"


இஸ்மத் அலி



'ஸலபிய்யா' என்ற சொல்லானது "ஸலப்' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும். முன் சென்றவர், கடந்து சென்றவர் என்பதே இதன் கருத்தாகும். இக்கருத்திலேயே அல்-குர்ஆன் இச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது.
فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ 'அவர்களை (உங்களுக்கு) முன் சென்றுவிட்டவர்களாகவும் ஏனையவர்களுக்கு உதாரணமாகவும் ஆக்கினோம' என்ற சூறதுல் சுஹ்ருபின் 56வது வசனம் இதற்கு சான்றாகும்.


பரிபாசையில் 'ஸலப்' என்ற சொல்லானது கருத்து வேறுபாடுகளும், ஏனைய தத்துவச் சிந்தனைகளும் அறியப்படுவதற்கு முன்னர் மார்க்கத்தை தூய்மையாக நடைமுறைப்படுத்தியவர்கள் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்து. இன்னொரு வகையில் சொல்வதென்றால் இச் சொல்லானது ஸஹாபாக்களையும், தாபிஊன்களையும், தபஉத் தாபீஈன்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த வகையில் 'ஸலபிய்யா' அல்லது 'ஸலபித்துவம்' என்பது மார்க்கத்தின் சிந்தனை, நடைமுறை என்பவைகளை ஸலபுகள் தாம் வாழ்ந்த காலத்தில் எந்த ஒழுங்கில் கட்டமைத்துக் கொள்ள முயற்சித்தார்களோ அவ்வொழுங்கில்; கட்டமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை இது குறிக்கும். இதன் கருத்து ஸலபுகள் தமது அனைத்து அம்சங்களையும் எவ்வாறு அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் அமைத்துக் கொண்டார்களோ அவ்வமைப்பில் எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்கமைத்துக் கொள்வதைக் குறிக்கும்.


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனும், சுன்னாவுமே மறுமை வரைக்குமான முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. இதை முஸ்லிம் சமூகம் கொள்கையளவிலாவது ஏற்றுக் கொண்டிருப்பதானது 'ஸலபித்துவம்' எல்லோர் மனங்களிலும் வாழ்கின்ற சிந்தனை என்பதைக் காட்டுகின்றது.

அடுத்து 'ஸலபித்துவம்' என்ற சிந்தனையின் தோற்றம், வளர்ச்சி என்பவை பற்றி நோக்குவோம். ஸலபித்துவத்தின் வளர்ச்சிக் கட்டங்களை அதன் வகைகளை மையமாக வைத்து நோக்குவதே ஸலபித்துவத்தை புரிந்து கொள்ள இலகுவாக அமையும் என்ற வகையில் ஆரம்பமாக அதன் வகைகளை கவனிப்போம். ஸலபித்துவத்தை 03 வகையாக நோக்க முடியும்.

1) ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா ( சட்ட வசனங்களை அடிப்படையாகக் கொள்ளும் ஸலபித்துவம்)
2) ஸலபிய்யதுல் அக்லானிய்யா-(வசனங்களோடு அறிவையும் அடிப்படையாகக் கொள்ளும் ஸலபித்துவம்)
3) ஸலபிய்யதுன் நஜ்திய்யா



ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா


ஸலபிய்ய சிந்தனை தோற்றத்தின் முன்னோடியாக இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ஹி:241) கருதப்படுகின்றார். இஸ்லாமிய அரசானது அறபு தேசத்தையும் தாண்டி ரோம, பாரசீக தேசங்களை வெற்றி கொண்டு ஏனைய சமூகங்களையும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் கொண்டு வந்த ஒரு காலப் பிரிவிலேயே இமாமவர்கள் வாழ்ந்தார்கள். இவ்வெற்றியின் பிரதிபலிப்பாக ஏனைய சமூகங்களின் சிந்தனைகளும், நடைமுறைகளும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைகளிலும், நடைமுறைகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கின. ரோம. பாரசீக தத்துவங்கள் அறபு மொழிக்குப் பெயர்க்கப்பட்டதன் விளைவாக அதன் சிந்தனை தாக்கத்திற்கு முஸ்லிம் அறிஞர்கள் உட்படலாயினர். குறிப்பாக இல்முல் கலாம் (நம்பிக்கை கோட்பாடு) விடயத்தில் முஸ்லிம் அறிஞர்கள் பகுத்தறிவுக்கு முதன்மையளித்து அதன் அடிப்படையில் இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாட்டை விளங்கவும், விளக்கமளிக்கவும் தொடங்கினர். இவர்களே பிற்காலத்தில் முஃதஸிலாக்கள் என அறியப்பட்டனர்.


இதை அவதானித்த இமாம் அஹ்மத் அவர்கள் 'ஸலபுகளின் வழியில் - அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையிலேயே மார்க்கத்தின் சகல அம்சங்களும் விளங்கப்பட வேண்டும்' என்ற சிந்தனையை முன்வைத்தார். இதுவே ஸலபித்துவ சிந்தனையின் ஆரம்பமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சம் முஸ்லிம் சமூகம் ஸலபுகளின் வழியை விட்டு விலகிச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்களை ஸலபுகளின் வழியின் பால் அழைப்பதே 'ஸலபிய்யா' என்பதாகும்.


இதன் அடிப்படையில் மார்க்கத்தின் அனைத்து அம்சங்களும் நஸ் (அல்-குர்ஆன், ஹதீஸ் வசனங்கள்) அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை இமாமவர்கள் முன்வைத்தார்கள். இமாமவர்கள் வாழ்ந்த சூழலைக் கருத்திற் கொண்டு அறிவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை இமாமவர்கள் முற்றிலும் மறுத்தார்கள். 'அறிவின் அடிப்படையில் செயற்படுவதை விட பலவீனமான ஒரு 'நஸ்'ஸின் அடிப்படையில் செயற்படுவது சிறந்தது' என்று சொல்லுமளவுக்கு இமாமவர்கள் அறிவின் அடிப்படையிலான செயற்பாட்டை கண்டித்தார்கள். இதற்குக் காரணம் வஹீ புறக்கணிக்கப்பட்டு அறிவு மேலோங்கிவிடும் ஒரு சூழலில் இமாமவர்கள் வாழ்ந்தமையாகும். என்றாலும் இக்கடின மனப்போக்கை இமாமவர்கள் அகீதா விடயங்களில் காட்டிய அளவுக்கு பிக்ஹ் விடயத்தில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிக்ஹ் விடயத்தில் கியாஸை (ஒரு சட்ட வசனத்தை சமகால பிரச்சினையோடு ஒப்பிட்டு தீர்வை பெறல்) அவசியத் தேவைகளின் போது பயன்படுத்தலாம் என்ற கருத்தை இமாமவர்கள் கொண்டிருந்தமை இதற்கு சான்றாகும்.


இமாமவர்கள் அறிவை விட சட்ட வசனங்களுக்கு (நஸ்) முதன்மையளித்த காரணத்தினால் இவர் முன்வைத்த ஸலபித்துவம் 'அஸ்-ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா' என அறியப்படுகின்றது.

இமாமவர்களுக்கு பின்னர் தோன்றிய பெரும்பாலான அறிஞர்கள் மார்க்கத்தை விளங்குவதிலும், அதனை விளக்கப்படுத்துவதிலும் இந்த 'ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா' வையே பின்பற்றினர்.



ஸலபிய்யதுல் அக்லானிய்யா


இமாம் அஹ்மத் அவர்களின் முயற்சியினால் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான அறிஞர்கள் ஏனைய தத்துவங்களினால் தாக்கமுறுவதிலிருந்து பாதுகாப்புப் பெற முடிந்தது. என்றாலும் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மார்க்கத்தை விளங்கும் கூட்டத்தை முற்றிலுமாக துடைத்தெறிய முடியவில்லை. அவர்களுக்கிருந்த அரச ஆதரவு அவர்களின் நிலைபேற்றுக்குக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் இவர்களுக்கு அறிவைக் கொண்டே பதிலளிப்பதற்கான முயற்சிகளை சில இமாம்கள் மேற்கொண்டனர். இவர்களில் இமாம் அபுல் ஹஸன் அல்-அஸ்அரீ, இமாம் பாகிலானீ, இமாம் ஜூவைனி, இமாம் கஸ்ஸாலி ஆகியோர் முக்கியமானவர்கள்.இவர்களின் முயற்சிகள் இஸ்லாத்துக்கு எதிரான ஏனைய தத்துவங்களின் கேள்வியெழுப்புதல்களுக்கும், பகுத்தறிவுவாதிகளின் சிந்தனை தடுமாறல்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தன.


ஆனால், இவர்களின் வழிமுறையைக் கைக் கொண்ட பின்வந்தோரில் சிலர் சட்ட வசனங்களுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை மறந்து தத்துவங்களுக்கும், கற்பனைகளுக்கும் அதிக முக்கியத்துவமளிக்கத் தொடங்கினர். எனவே மீண்டும் உம்மத்தை 'ஸலபிய்யத்'தின் பால் அழைக்க வேண்டிய தேவையேற்பட்டது.


இந்த வகையில் மீண்டும் ஸலபிய்யத்தை நோக்கிய அழைப்பை இமாம்களான இப்னு அகீல் (ஹி:513), இமாம் இப்னு தைமிய்யா (ஹி:728) அவரது மாணவரான இமாம் இப்னு கையும் அல்-ஜவ்ஸிய்யா (ஹி:751) போன்றோர் முன்னெடுக்கத் தொடங்கினர். இவர்கள் இமாம் அஹ்மதைப் போன்று அறிவுக்குள்ள அந்தஸ்த்தை புறக்கணிக்காமல் அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் மார்க்கத்தை அணுகும் வழிமுறையைக் காட்டித்தந்தனர். சட்ட வசனங்களை அறிவைக் கொண்டு ஆராய்வதையும், இன்னொரு சட்ட வசனத்திற்கு முரண்படாத வகையில் தீர்வு காண்பதையும் இவர்கள் ஆகுமானதாகக் கருதினர்.


மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் சட்ட வசனங்களுக்கும், அறிவுக்குமிடையிலான தொடர்பை விளங்கி சமூகத்தை 'ஸலபு'களின் வழியில் இட்டுச் சென்றதன் காரணமாக இவர்கள் முன்வைத்த ஸலபித்துவம் 'ஸலபிய்யதுல் அக்லானிய்யா' என அழைக்கப்படுகின்றது. இவ்வகை ஸலபிய்யத் இமாம் அஹ்மத் முன்வைத்த ஸலபிய்யத்திலிருந்து வித்தியாசமானதாகவும், விசாலமானதாகவும் இருந்தது. சட்ட வசனங்கள் இல்லாத விடயங்கள் மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல என்றே இமாம் அஹ்மத் கருதினார். ஆனால் இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னு ஜவ்ஸீ போன்றோர் அரசியல், சமூகவியல் துறைகளிலும் மார்க்கத்தையும், அறிவையும் பயன்படுத்தி அவற்றுக்கான அடிப்படைகளை வகுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஸலபிய்யதுன் நஜ்திய்யா

இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (கி.பி : 1892) சவூதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளைக் கொண்டு இந்த 'ஸலபித்துவம்' அறியப்படுகின்றது. நஜ்த் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூட நம்பிக்கைகளிலும், பித்அத்களிலும் மூழ்கிப் போயிருப்பதைக் கண்ட இமாமவர்கள் அவர்களை அல்-குர்ஆன், சுன்னாவை மட்டுமே பின்பற்றுமாறு அழைப்புவிடுக்கத் தொடங்கினார். மேலும் அவர்களது செயல்களை இணைவைப்பு என்றும் இறை மறுப்பு என்றும் எச்சரித்தார்.


இமாம் அப்துல் வஹ்ஹாப் அழைப்புவிடுத்த ஸலபித்துவம் மேலே குறிப்பிட்ட இருவகையான ஸலபித்துவங்களின் அளவுக்கு விரிவானதாக இருக்கவில்லை. ஏனெனில் இமாமவர்கள் வாழ்ந்த நஜ்த் பிரதேசம் கிராமப்புறமாக இருந்தமையால் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களும், அக்காலை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்த சவால்களையும் முழுமையாக புரிந்து கொள்ளும் சூழல் அவருக்கு இருக்கவில்லை. எனவே அவர் அழைப்புவிடுத்த 'ஸலபித்துவம்' மூடக் கொள்கை ஒழிப்பு, இபாதத்களிலுள்ள பித்அத்களை ஒழித்தல் என்ற வரையறைக்குள் சுருங்கியதாகக் காணப்பட்டது. என்றாலும் இவரது சிந்தனைத் தாக்கம் அரேபியாவில் மிக வேகமாக வளர்ச்சியடையலானது.


மேலும் இமாம் அஹ்மத், இமாம் இப்னு தைமிய்யா ஆகியோர் ஸலபித்துவத்தை ஏற்படுத்துவதற்காக கையாண்ட வழிமுறைகளும் இமாம் அப்துல் வஹ்ஹாப் கையாண்ட வழிமுறைகளும் வித்தியாசமானதாக இருந்தன. இமாம் அஹ்மதோ, இமாம் இப்னு தைமிய்யாவோ ஸலபித்துவத்திற்கு வெளியில் நின்றோரை ஒரு போதும் குப்ரைக் கொண்டோ, சிர்க்கைக் கொண்டோ அழைக்கவில்லை. ஆனால் இமாம் அப்துல் வஹ்ஹாபின் வழிமுறை இதற்கு மாற்றமாக இருந்தது.


இமாம் அப்துல் வஹ்ஹாப் அழைப்புவிடுத்த 'ஸலபித்துவம்' சமகால முஸ்லிம் உலகு எதிர்கொண்டிருந்த சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை. காலணித்துவச் செல்வாக்கும், அறிவியல் வளர்ச்சியும் முஸ்லீம்களை இஸ்லாத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்திருந்தது, இந்த நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுத்து அவர்களை மீண்டும் 'ஸலபிய்யத்'தின் பால் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை உணரப்பட்டது.


இத்தேவையை உணர்ந்தோர்களில் இமாம்களான ஜமாலுத்தீன் ஆப்கானீ, முஹம்மது அப்தூஹ் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்கள் அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் முஸ்லிம் சமூகம் நவயுகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளை முன்வைத்தனர். இவர்களது சிந்தனையால் தாக்கமுற்ற இமாம் ஹஸனுல் பன்னா, மௌலானா மௌதூதி போன்றோர்கள் மீண்டும் 'ஸலபிய்யத்'தை சிந்தனை ரீதியாகவும், செயல்ரீதியாகவும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.


இறுதியாக...

முஸ்லிம் சமூகம் மறுமை வரை 'ஸலபிய்யத்'தில் நிலைத்திருப்பதில்தான்; அதன் இம்மை, மறுமை வெற்றி தங்கியிருக்கின்றது. ஸஹாபாக்களும், அவர்களைத் தொடர்ந்தோரும் இந்த மார்க்கத்தை எவ்வாறு தெளிவாக அதன் நோக்கங்களை விளங்கி, அதை நடைமுறைப்படுத்தினார்களோ அதன்பால் மீள்வதும் அதன்பால் அழைப்பதுமே உண்மையான 'ஸலபிய்யத்'. முஸ்லிம் சமூகம் அல்-குர்ஆனையும், சுன்னாவையும் விட்டு விலகி ஏனைய கொள்கைகளையும், சிந்தனைகளையும், தமது மனோ இச்சையையும் பின்பற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 'ஸலபிய்யத்'தை நோக்கி அழைக்க வேண்டிய தேவையேற்படுகின்றது. இந்த அழைப்பானது சுருங்கிய வரையறைகளைக் கொண்டிருப்பதும், 'ஸலபு'களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்பதுவும் 'ஸலபிய்யத்'தை நோக்கிய உண்மையான அழைப்பாக இருக்க முடியாது. அதே போல கால, சூழலைக் கருத்திற் கொண்டதாகவும், காலத்தின் தேவையை புரிந்து கொண்ட வகையிலும் இந்த அழைப்பு அமைய வேண்டும். இல்லையெனில் ஸலபிய்யத்தை நோக்கிய அழைப்பு மக்களை விரண்டோடச் செய்யுமே தவிர அவர்களை இந்த அழைப்பை நோக்கி ஓடோடி வரச் செய்து விடாது.

ஆனால் இன்று 'ஸலபிய்யத்'திற்கு சொந்தம் கொண்டாடும் சிலர் 'ஸலபிய்யத்' என்பதன் உண்மை அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்களா? அதன்பால் அழைக்கின்ற போது 'ஸலபு'களின் வழிமுறைகளைக் கைக்கொள்கின்றார்களா? என்பது கேள்விக் குறியே!!

20 மே, 2011

நுனிப்புல் மேயும் ஸலபித்துவ ஆய்வுகள். தஜ்ஜாலின் வருகையை மௌலானா மௌதூதி மறுக்கிறாரா?



இஸ்மத் அலி


தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்களாகிவிட்ட நிலையாகிவிட்டது இன்றைய தஃவாக் களம். அல்-குர்ஆனையும்> சுன்னாவையும் அதன் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ளத் தெரியாத பலர்> சில ஒன்லைன்களை தமது முதற்தர சட்ட மூலாதாரமாக்கிக் கொண்டு தீர்ப்புக்களையும்> தீர்வுகளையும்> விமர்சனங்களையும் அள்ளி வீசுவதையே தஃவா என்று எண்ணிச் செயற்படுகின்ற அவலநிலையே இன்றைய தஃவாக் களத்தில் காண முடிகின்றது.

இவர்களின் இத்தகைய விமர்சனங்களுக்கு மறுப்பெழுதி> இஸ்லாமிய சமூக மாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் நேரத்தை வீணடிக்காதிருப்பதும்> மனஸ்தாபங்களை வளர்க்காதிருப்பதுமே சிறந்தது என்ற வழிமுறையை இயக்கம் எமக்குக் கற்றுத் தந்திருந்தாலும் தொடர்ந்தேர்ச்சையான இவர்களின் இச்செயல்கள் அறியாமையா?> வீம்பா?> அல்லது மறை கரங்களின் சதியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

சத்தியத்தைச் சொல்வதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள் எப்படி செய்திகளை புனைகிறார்கள்?> திரிபுபடுத்துகிறார்கள்? என்பதை நடுநிலையாக சிந்திக்கின்றவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

இலங்கை தௌஹீத் ஜமாஅத் வெளியிடும் மாத இதழான 'அழைப்பு' அண்மையில் 'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி – பதில் தருமா ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. இக்கட்டுரையில் மௌலானா மௌதூதி மீது பின்வரும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

1) தஜ்ஜாலின் வருகையை மௌதூதி மறுக்கிறார்.
2) நபியவர்கள் வஹியின் அறிவில்லாமல் தஜ்ஜால் பற்றி அறிவித்துள்ளார்கள் என்று கூறி மௌதூதி நபிகளார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தி அவதூரு பரப்புகின்றார்.

கடந்த ஏப்ரல் (2011 – 1-15) மாத சமரசம் (இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் சஞ்சிகை) இதழில் வெளியான 'எங்கே தஜ்ஜால்?' என்ற கட்டுரையை ஆதாரமாக வைத்தே இக்குற்றச் சாட்டுக்களை இவர்கள் முன்வைக்கின்றனர்.

இனி விடயத்திற்கு வருவோம். உண்மையில் மௌலானா மௌதூதி அவர்கள் தஜ்ஜாலின் வருகையை மறுக்கின்றாரா?> அச்சிந்தனையில்தான் ஜமாஅத்தே இஸ்லாமி செயற்படுகின்றதா? என்றால் அது உண்மையல்ல.

இவர்கள் ஆதாரம் காட்டும் சமரசம் கட்டுரையை இவர்கள் திறந்த கண்களோடு வாசித்திருந்தால் இப்படியான ஒரு பொய்யை புனைந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் இவர்கள் குரோதம்> காழ்ப்புணர்வு என்ற கருப்புக் கண்ணாடியணிந்தே இக்கட்டுரையை வாசித்திருக்க வேண்டும். ஏனெனில் மௌலானா மௌதூதி அவர்கள் தனது கட்டுரையின் ஆரம்பத்திலேயே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

' தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதைதான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் 'மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்'.


இப்பந்தியை இவர்கள் வாசித்திருக்காமல் விட்டிருக்க முடியாது. இதை வாசித்த பிறகும் தமது கட்டுரைக்கு 'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி' என்று தலைப்பிட இவர்களைத் தூண்டிய காரணி எதுவாக இருக்க முடியும்? சிந்திப்பவர்கள் காரணத்தைப் புரிந்து கொள்வார்கள்.


அது மட்டுமன்றி மௌலானா அவர்கள் தமது தப்ஸீரான தப்ஹீமுல் குர்ஆனில் தஜ்ஜாலின் வருகை உண்மையானது என்பதை ஏற்றுக் கொள்வதோடு அதை ஹதீஸ் ஆதாரங்களோடும் நிரூபிக்கின்றார்கள். சூறதுல் அஹ்சாபின் 40வது வசனமான 'مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا என்ற வசனத்திற்கான விளக்க உரையில் இறுதி நபித்துவத்தோடு சம்பந்தப்படுத்தி ஈஸா அலைஹிஸ்ஸலாம்> தஜ்ஜால் ஆகியோரின் வருகைப் பற்றி ஒரு நீண்ட விளக்கத்தை மௌலானா அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில் தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார் மௌலானா :

' நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும்> அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும்> அது சமயம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும்> அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும்> அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்' (தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு – பக்கம் : 78)


இந்த ஆதாரத்திற்குப் பின்னும் இவர்கள் 'மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறார்' என்று சொல்வார்களாயின் இவர்கள் பத்திரிகை தர்மங்களின் அடிப்படையில் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர்கள். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் தமது விதண்டாவாதங்களுக்காக அல்லாஹ்விடத்தில் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இனி இவர்களின் இரண்டாவது குற்றச்சாட்டு பற்றி நோக்குவோம். 'தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்களை நபிகளாரின் எண்ணமே அன்றி வஹியல்ல என்று கூறி மவ்தூதி நபிகளார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தி அவதூரு பரப்புகின்றார்'. என்பதுதான் அது.

உண்மையில் தமீம் அத்தாரி என்ற ஸஹாபி தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்ட கடற் பிரயாணமொன்றில் தஜ்ஜாலை சந்தித்த நிகழ்வு பற்றி வந்திருக்கும் ஹதீஸ் குறித்து மௌலானா மௌதூதி அவர்கள் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சைனப் பின்த் கைஸ் ரழியல்லாஹூ அன்ஹா அறிவிக்கும் இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் 'கிதாபுல் பிதன்' அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸ் பற்றி மௌலானா குறிப்பிடும் போது :

'தமீம் தாரி அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா? நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா?' என்று வினவுகின்றார்.

இந்த ஹதீஸைப் பற்றிய ஆய்வுக்கு முன்னர் மௌலானா மௌதூதி அவர்கள் நபியவர்கள் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்கவில்லை என்பதையும்> அவற்றை வஹியின் அறிவின்றி தமது அனுமானத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டார்கள் என்றோ மௌலானா கருதவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாற்றமாக தமீம் அத்தாரி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சம்பந்தமான ஹதீஸை மட்டுமே மௌலானா நபிகளாரின் அனுமானம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து மேற் கூறிய ஹதீஸை நபிகளாரின் அனுமானம் என்று விளங்கிக் கொள்வதற்கான சாத்தியம் இருப்பதை அந்த ஹதீஸை ஆழ்ந்து நோக்குகின்ற போது புரிந்து கொள்ளலாம்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் சைனப் பின்த் கைஸ் ரழியல்லாஹூ அன்ஹா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'தொழுகை முடிந்து நபிகளார் சிரித்த வண்ணம் மிம்பரில் அமர்ந்து கொண்டார்கள். பிறகு அனைவரையும் அவரவர் இடத்தில் அமருமாறும் பணித்தார்கள். பின்னர் 'உங்களை ஏன் அழைத்தேன் என்று தெரியுமா?' என்று ஸஹாபாக்களைப் பார்த்து வினவ> அதற்கு அவர்கள் 'அல்லாஹூம் ரஸூலுமே அறிந்தவர்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள் கூறினார்கள் :

'உங்களுக்கு உபதேசிக்கவோ> எச்சரிக்கை செய்யவோ நான் அழைக்கவில்லை. மாற்றமாக கிறிஸ்த்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற தமீம் அத்தாரி சொன்ன ஒரு சம்பவத்தைக் கூறவே உங்களை அழைத்தேன். உங்களுக்கு ஏலவே நான் தஜ்ஜால் பற்றிக் கூறியிருக்கிறேனல்லவா? தமீம் அத்தாரி குறிப்பிட்ட அச்சம்பவம் நான் சொன்னவைகளோடு உடன்படுகின்றது' என்று கூறிவிட்டே தமீம் அத்தாரி அவர்கள் குறிப்பிட்ட சம்பவத்தை ஸஹாபாக்களுக்கு நபிகளார் அறிவித்தார்கள்.

இங்கு நபிகளார் ஆரம்பத்திலேயே, தான் 'உபதேசிக்கவோ> எச்சரிக்கவோ உங்களை அழைக்கவில்லை' என்று குறிப்பிட்டது நபிகளார் வஹியின் மூலம் அறிவிக்கப்பட்ட செய்தியொன்றை கூறவில்லை என்ற விளக்கத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு உடன்பாடாக அமைகின்றது.

இதன் அடிப்படையிலேயே மௌலானா அவர்கள் தஜ்ஜால் ஏற்கனவே தோன்றிவிட்டான் என்ற செய்தி நபிகளாரின் அனுமானமே தவிர வஹியல்ல என்ற முடிவுக்கு வருகின்றார். இம்முடிவுக்கு வந்ததன் காரணமாக மௌலானா நபிகளாரின் ஹதீஸ்களை மறுக்கின்றார்> அவர் மீதே சந்தேகப்படுகின்றார்> அவதூரு பரப்புகின்றார் என்று கூறுவது சரியாகது. தௌஹீத்வாதிகள் சொன்னதுக்காக சத்தியமும் ஆகிவிடாது.

நபிகளார் மீதும்> அவர்களின் நபித்துவத்தின் மீதும் மௌலானா கடுகளவு கூட சந்தேகம் கொண்டிருக்கவில்லை என்பதை இவர்கள் ஆதாரம் காட்டும் சமரசம் கட்டுரையே சான்றுபகர்கின்றது. அக்கட்டுரையில் மௌலானா பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :
(நபி) அவர்களின் கூற்று (தஜ்ஜால் தோன்றி விட்டான் என்ற அனுமானம்) உண்மையானது என்று உறுதிப்படவில்லையானாலும் அவர்களின் நபித்துவத்தில் எவ்விதமான குறையையும் ஏற்படுத்துவதில்லை. நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையிலும் குறை ஏற்படுவதில்லை'
இதற்கும் மேலாக இறுதி நபித்துவத்திற்கு எதிரான காதியானிய சிந்தனைக்கு எதிராக மௌலானா போராடி தூக்கு மேடை வரைச் சென்று வந்தவர். அத்தயை ஒருவருக்கு 'நபிகளாரின் மீது அவதூரு பரப்புகின்றார்' என்று குற்றம்சாட்டுவது எத்தகைய அசத்தியமாக இருக்க முடியும்.

நுனிப்புல் மேய்ந்து, அழுக்கைத் தேடியலையும் சில ஸலபீக்களின் மட்டமான ஆய்வுகளுக்கு இந்தக் கட்டுரை முற்றிப் புள்ளி வைத்துவிடாது என்று தெரியும். என்றாலும் - சத்தியம் மேலோங்கும் போது அசத்தியம் சுவடில்லாமல் அழிந்து போகும் என்பது திண்ணம்.



அழைப்பில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
http://www.rasminmisc.tk/

சமரமசம் இதழில் வெளியான மௌலானா மௌதூதியின் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.samarasam.net/01-15_Apr_11/index.htm#60

14 ஜன., 2010

தமிழ் மொழி தர்ஜூமாவும் இலங்கையில் அறிமுகமான பின்னணியும்

இஸ்மத் அலி -நளீமி


அல்-குர்ஆனை அல்லாஹூத்தஆலா அரபு மொழியிலேயே இறக்கினான். அதன் மொழி,இலக்கிய நயம் என்பவைகளைக் கொண்டு அதனை அழியாத அற்புதமாகவும் ஆக்கினான். இஸ்லாத்தின் பால் பிற மொழி பேசுவோரும் உள்நுழைந்த போது அவர்கள் அல்-குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. என்றாலும் இஸ்லாமிய அறிஞர்கள் அல்-குர்ஆனை பிற மொழிகளில் பெயர்ப்புச் செய்வதை விடுத்து அரபு மொழியைக் கற்கச் செய்தல், அல்லது குர்ஆனுக்கான விளக்கவுரைகளை செய்தல் போன்றவற்றின் மூலம் அரபியர் அல்லாதவர்கள் அல்-குர்ஆனை விளங்குவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். அரபல்லாத மொழியில் அல்-குர்ஆனை மொழிபெயர்ப்பதையும் கண்டித்தனர்.


என்றாலும் கி.பி. 7ம் நூற்றாண்டில் முதன் முதலாக பாரசீக மொழியில் சூறதுல் பாத்திஹா மொழி பெயர்க்கப்பட்டது.கி.பி.9ம் நூற்றாண்டில் முழுமையாக அல்-குர்ஆன் பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டது என்றாலும் வெளியிடப்படவில்லை.

சிலுவை யுத்த காலப் பகுதியில் இருந்து அல்-குர்ஆனை ஐரோப்பிய மொழிகளில் பெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரொபர்ட் கேட்டன் என்பவர் 1143ம் ஆண்டில் லத்தீன் மொழியில் அல்-குர்ஆனை மொழிபெயர்த்தார். ஆங்கில மொழியில் முதன் முதலாக அல்-குர்ஆன் 1649ல் அலக்ஸான்டர் ரோஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

காலணித்துவத்தைத் தொடர்ந்து கீழைத் தேய ஆய்வுகளில் முயற்சிகளை மேற்கொண்டவர்களும் அல்-குர்ஆன் மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். John Rodwell (1808-1900), Edward Palmer (1840-1882),Sir William Muir (1819-1905)
போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
1936ம் ஆண்டளவில் சுமார் 102 மொழிகளில் அல்-குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.



தமிழ் மொழியில் அல்-குர்ஆன் மொழிபெயர்ப்பு

1940 ம் ஆண்டின் முன்னரைப் பகுதியில் ஆ.க. அப்துல் ஹமீத் பாகவியால் அல்-குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.ஆ.க தனது மொழி பெயர்ப்பை பூர்த்தியாக்கிய போதும் அதனை வெளியிடுவதில் பணச் சிக்கலை எதிர்க் கொண்டார். இந்நேரத்தில் அவருக்கு பணவுதவி செய்து முதல் தமிழ் மொழிபெயர்ப்பை வெளிக் கொணர உதவி செய்தவர் ஓர் இலங்கைச் சோனகர் என்பது குறிப்பிடத் தக்கது.

மொழி பெயர்ப்பை வெளியிடுவதில் பண நெருக்கடியை ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி எதிர்க் கொண்ட போது அவர் இலங்கை தனவந்தர்களிடம் உதவி பெரும் நோக்கில் 1947ம் வருடம் இலங்கைக்கு வந்தார். அதன் போது அவருக்கு உதவி செய்வதற்கான ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. என்றாலும் பதிப்பிற்பதற்கான முழுச் செலவையும் N.M.M ஹனீபா(பாஃமன்ற உறுப்பினர் M.H. முஹம்மத் அவர்களின் தந்தை) பொருப்பேற்றுக் கொண்டார்.
இது பற்றி தர்ஜூமாவின் பதிப்புரையில் அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் குறிப்பிடும் போது..

''இறைவனின் அருளால் மாட்சிமைத் தாங்கிய நிஜாம் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டும் மற்றும் பல முஸ்லிம் பிரமுகர்களின் உதவியைக் கொண்டும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்து உலமாக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்னர் இதனை அச்சிட்டு வெளியிடுவது பெரும் பிரச்சினையாயிற்று.ஏனென்றால் இதற்கு வேண்டிய காகிதம்இபிளாக்குகள் முதலியவைகளின் கிரயமும் அச்சுக்கூலி பைன்ட் கூலி முதலியவைகளின் செலவுத் தொகையும் யுத்த காலத்திற்கு முன்னிருந்ததை விட பல மடங்கு அதிகரித்து விட்டன.ஆகவே தயாராகியிருக்கும் மொழிபெயர்ப்பை அச்சிட்டுப் பிரசுரிப்பதற்கு ஒரு பெரும் தொகை தேவைப்படுமென தெரிய வந்தது.
இதற்காக நான் சிலோன் சென்று அங்குள்ள பல பிரமுகர்களைக் கொண்டதொரு கமிட்டியும் அமைத்து ஆவன செய்து வந்தேன்.இதன் மத்தியில் கண்டியார்| என அழைக்கப் பெற்ற மகா கனம் நாகூர் மீரான் அவர்களின் புதல்வராகிய கொழும்பு ஹோர்ட்டன் ப்ளேஸ் தாருல் மினனில் வசித்து வரும் மகா கனம் என்.எம்.எம்.ஹனீபா புறக்டர் அவர்களைச் சந்திக்கும்படி நேரிட்டது.அது சமயம் என்னுடன் வந்திருந்த பெரியார் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து நான் வந்திருக்கும் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்கள்.இதனை செவியுற்ற அவர்கள் மிக்க மேலான விதத்தில் இதனை அச்சிட்டு வெளியிட எவ்வளவுத் தொகை தேவைப்படுமென்று கேட்டார்கள்.அதற்கு நான் என்னுடைய மதிப்பையும் திட்டத்தையும் கூறினேன்.
...இதனை பிரசுரிப்பதற்குரிய முழுத்தெகையையும் ஆலி ஜனாப் N.ஆ.ஆ ஹனீபா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதின் காரணமாக இதறகென அமைக்கப் பெற்ற கமிட்டியில் அங்கம் வகித்த பெரியார்களுக்கு இவ்விஷயத்தில் எத்தகைய சிரமமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமலாகிவிட்டது’’. என்று குறிப்பிடுகின்றார்.

தமிழ் தர்ஜூமா இலங்கையில் அறிமுகமான பின்னணி :

அல்-குர்ஆனை இலங்கையில் அறிமுகப்படுத்திய பெருமை காணல்பட்டணத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஜீலானி ஸாஹிபவர்களுக்கே சாரும். இவர் அலிகார் பல்கலைகழகத்தின் பட்டதாரியாவார்.இந்திய உபகண்ட ஜமாஅதே இஸ்லாமியின் முதல் மர்க்கஸான பத்தான் கோட்டில் பல மாதங்கள் மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்களுடன் தங்கி பயிற்சிபெற்று அங்கத்துவ பைஅத் செய்து கொண்டவர்.

ஆ.க.அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் தமிழ் தர்ஜூமாவின் ஆயிரம் பிரதிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் நோக்கோடு 1949 ம் வருடம் இவர் இலங்கைக்கு வந்தார்.
ஆ.க.அப்துல் ஹமீத் பாகவியின் தமிழ்த் தர்ஜூமா பற்றிய செய்தி ஏற்கனவே இலங்கையில் அறியப்பட்டிருந்தது என்றாலும் அல்-குர்ஆனை மொழி பெயர்ப்பதோ அதனைப் படிப்பதோ பெரும் பாவங்களில் ஒன்றாகவே பெரும்பாலான இலங்கை முஸ்லீம்களால் பார்க்கப்பட்டது. இலங்கை முஸ்லீம்கள் அல்-குர்ஆனை மட்டுமன்றி மார்க்கம் சம்மந்தப்பட்ட எதனையும் அரபல்லாத மொழியில் எழுதுவது ஹராம் என்றே கருதினர். அரபுத் தமிழ் தோற்றம் பெறுவதற்கும் இதுவே பிரதான காரணியாக அமைந்தது.
எனவே மொழி பெயர்ப்புப் பிரதிகளை விற்பனைச் செய்வதில் ஜீலானி ஸாஹிபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்க் கொள்ள வேண்டியிருந்தது.

ஜீலானி ஹஸரத் அவர்கள் தர்ஜூமா பிரதிகளை எடுத்துக் கொண்டு நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அனுமதியைப் பெற்று அல்குர்ஆனை படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றி தான் கொண்டு வந்திருக்கும் தர்ஜூமாவை அறிமுகப்படுத்தி விற்பனைச் செய்துள்ளார். ஜீலானி ஹஸரத் அவர்களுக்கு மட்டக்களப்பில் புகாரி விதானையர்(ஏறாவூர்) என்பவரும் கல்முனையில் அஹ்மத் லெப்பை என்பவரும் பேருவலையில் எம்.எல்.எம்.ஹாசிம் என்பவரும் ஆதரவளித்து விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்த கொடுத்துள்ளனர்.புத்தளம் மௌலா மக்காம் பள்ளிவாசலில் தர்ஜூமா அறிமுக உரையை ஜீலானி ஹஸரத் நிகழ்த்தியதாக புத்தளம் மாவட்ட முன்னாள் உலமா சபைத் தலைவர் கூறிய தகவலொன்றையும் இவ்வாய்வுக்காக புத்தளம் சென்ற போது அறிந்து கொள்ள முடிந்தது.

வெறும் வியாபார நோக்கமாக மட்டும் ஜீலானி ஹஸரத் அவர்கள் இங்கு வரவில்லை என்பது தெளிவாகும்.ஏனென்றால் தனது விற்பனைப் பணி முடிவடைந்தவுடன் நாடு திரும்பாது அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களை ஆரம்பித்தhர். அத்தோடு அருள் ஜோதி எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டார்.அனைத்துக்கும் மேலாக 1954ம் வருடம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து அதன் அமீராக சுமார் இரண்டு வருடங்கள் பணியாற்றியமைக் குறிப்பிட்டு கூறத்தக்கது.