
நிமிடங்களும், மணித்தியாலங்களும், நாட்களும் கணக்கின்றி கழிகின்றன. மாதங்கள் உருண்டோடி வருடமொன்று நிறைவடைகின்ற போதே நாம் ஓரளவாவது காலத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்கின்றோம். கண் மூடித் திறப்பதற்குள் வருடமொன்று முடிவடைந்துவிட்டதே என்று அங்கலாய்க்கின்றோம். தொழில், குடும்பம், சொத்து சேகரிப்பு இதிலேயே எம் காலங்கள் கழிந்து போய்விடுகின்றன. படைத்த இறைவனுக்காக நான் என்ன செய்தேன்? என்று சிந்திப்பவர்கள் எம்மில் குறைவாகவே உள்ளனர். செல்வத்தை அள்ளிச் சேகரித்து வைப்பதில் ஆர்வம் உள்ள அளவுக்கு எமக்கு நன்மைகளை அள்ளிக் கொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை.
நன்மைகளை அள்ளிக் கொள்வதில் போட்டி போட்டுக்கொள்ளுங்கள் என்று அல்-குர்ஆன் எமக்கு கட்டளையிடுகின்றது. முஃமின்களின் பண்பு அதுவாகத்தான் இருக்க வேண்டும். அவர்களின் போட்டி பணத்தையும் செல்வத்தையும் சேகரிப்பதிலோ, பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலோ, பிறரை வீழ்த்தியேனும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதிலோ இருக்க மாட்டாது.
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
'உங்கள் இறைவனிடமிருந்து பாவ மன்னிப்பையும், சுவனத்தையும் பெற்றுக் கொள்வதில் போட்டி போட்டு முந்திக் கொள்ளுங்கள். அந்த சுவனத்தின் விசாலம் வானம், பூமி அளவுடையது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கைக் கொண்டவர்களுக்காக அது தயார்படுத்தப்பட்டுள்ளது. சுவனம் என்ற இந்த அருளை தான் நாடிய மனிதர்களுக்கு அல்லாஹூத்தஆலா வழங்குகின்றான். மேலும் அல்லாஹூத்தஆலா சிறப்பும் கண்ணியமும் கொண்டவனானவான்'.
(சூறதுல் ஹதீத் : 21)
சகோதரர்களே !! சகோதரிகளே!!
நன்மைகளை அள்ளி, இறை அன்பையும் அவனது அவனது அருளையும் பெற்று சுவனத்தின் சொந்தங்களாய் மாற எமக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பம் வருகிறது.
ஷஃபான் வருகிறது.
ஸஃபான் மாதத்தின் சிறப்பு.
இறை தூதருக்கு மிக விருப்பமான மாதங்களில் ஸஃபானும் ஒன்றாகும். கண்ணியத்துக்குரிய நான்கு மாதங்களில் ஒன்றான ரஜப் மாதத்திற்கும், அல்-குர்ஆன் இறக்கப்பட்ட ரமழானுக்கும் இடைப்பட்ட மாதம் என்ற வகையிலும், மனிதர்களின் செயல்கள் அல்லாஹூத்தஆலாவிடத்தில் எடுத்துக்காட்டப்படுகின்ற மாதம் என்ற வகையிலும் ஸஃபான் மாதம் சிறப்புப் பெறுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ரமழான் - ரஜப் ஆகிய இரு மாதங்களுக்கிடையே வரும் ஸஃபான் மாதத்தில் மக்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். அம்மாதத்தில்தான் மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் எடுத்துக் காண்பிக்கப்பட்டு உயர்த்தப்படுகின்றன. என்னுடைய செயல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்படுவதை விரும்புகின்றேன்'.
(நூல் : நஸாஈ)
ஸஃபான் மாத நோன்பு.
நபி(ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களை விட சுன்னத்தான நோன்புகளை ஸஃபான் மாதத்திலேயே அதிகம் நோற்பவர்களாக இருந்துள்ளார்கள்.
ரமழான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதத்திலும் நபி (ஸல்) முழுமையாக நோன்பு வைத்ததாக நான் பார்த்ததில்லை. மேலும் ஷஃபான் மாதத்தில் அன்னார் அதிகமாக நோன்பு நோற்றது போல வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.
(நூல் : புகாரி, முஸ்லிம்)
நன்மைகளை அள்ளிக் கொள்ளும் விருப்பமுடையவர்கள் இம்மாதத்தில் அதிகமதிகம் நோன்புகளை நோற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முடியாதவர்கள் திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் அல்லது குறைந்தது பிறை 13,14,15 ஆகிய தினங்களிலாவது நோன்பு நோற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மேலும் கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் ஸஃபான் என்பதால் நோன்புகளை கழாச் செய்ய வேண்டியவர்கள் இம்மாதத்தில் தமது நோன்புகளை கழாச் செய்து கொள்ள வேண்டும்.
ஆயிஷா (ரழி) அறிவிக்கின்றார்கள் எனக்கு ரமழான் நோன்பு(களில் சில) விடுபட்டுப் போகும். அவற்றை நான் ஷஃபான் மாதத்தில்; நிறைவேற்றுவேன்.
(நூல் : புகாரி, முஸ்லிம்)
என்றாலும் இம்மாதத்தின் பிறை 15 மாத்திரம் குறிப்பாக்கி அதில் இபாதத் செய்வது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத வழியாகும். இம்மாதம் முழுதும் விசேடமானதே. ஒரு தினத்தை மாத்திரம் குறிப்பாக்கி அதில் நோன்பு நோற்பதோ அல்லது விசேடமான இபாதத்களைச் செய்வதோ ஆகுமானதல்ல.
ரமழானுக்கு தயார்படுத்தும் மாதம்.
ஸஃபான் மாதம் ரமழான் மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான முன்னோடி பயிற்சியை வழங்கும் மாதமாகும். அறிஞர்கள் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்புகளை பர்ளான தொழுகைகளுக்கு முன்னால் தொழப்படும் சுன்னத்தான தொழுகையோடு ஒப்பிட்டு நோக்குகின்றனர்.
இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள் : ஸூன்னத்தான அமல்களில் ரமழானுக்கு நெருக்கமான காலத்தில் நிறைவேற்றும் அமல்கள் சிறந்தது. இம்மாதத்தில் நோன்பு நோற்பது ராதிபத்தான ஸுன்னத்தின் நன்மையைப் பெற்றுத் தரும். அது பர்ளான நோன்புகளில் விடுபடும் குறைபாடுகளுக்கான நிவர்த்தியாகவும் அமையும்.
எனவே இம்மாதம் நாம் நன்மைகளை அள்ளிக் கொள்வதற்கான மாதமாக வருகிறது. இம்மாதத்தில் நோன்பு நோற்று எமது அமல்கள் நாம் நோன்பாளிகளாக இருக்கின்ற நிலையில் உயர்த்தப்படுவதற்கு வழிசெய்வோமாக. தர்மங்கள் ஏனைய இபாதத்களை அதிகமதிகம் நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொள்வோமாக !!
« யாஅல்லாஹ் எங்களுக்கு ரஜப், ஷஃபான் மாதங்களில் அருள்பாளிப்பாயாக! மேலும் ரமழானை அடைந்து கொள்ளச் செய்வாயாக. »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக